செய்யது பீடி நிறுவனம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை தகவல்
சென்னை: வருமானவரி முறையாக செலுத்தப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் செய்யது பீடி நிறுவனத்தில் வருமான வரி 2வது நாளாக மேற்கொண்ட சோதனையில், ரூ90 கோடி வரை வரிஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது செய்யது பீடி நிறுவனம். இதற்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. செய்யது பீடி நிறுவனம் முறையாக வரிசெலுத்தவில்லை என்று கூறி நேற்று நெல்லை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இரண்டாவது நாளாக இன்றும் நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரூ.90 கோடி வரை வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வருமானத்திற்கு பொருந்தாத வகையில் துபாயில் முதலீடு செய்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையின் முடிவில் மேலும் பல ஆவணங்கள் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.