சென்னை அருகே அடுத்தடுத்து வெடித்த 3 நாட்டு வெடிகுண்டுகள்.... சிவசேனா நிர்வாகிகளுக்கு குறியா?
சென்னை: சென்னை அருகே கானத்தூர் என்ற இடத்தில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் நடைப் பயணமாக வந்த சிவசேனா கட்சியினரைக் குறி வைத்து இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலாங்கரை அருகே உள்ள கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென பலத்த சப்தத்துடன் முதல் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
அடுத்து, கானத்தூர் மீன் மார்க்கெட், கானத்தூர் பொழுது போக்கு மையம் அருகே அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. குண்டுகள் வெடித்ததால் அதிர்வு ஏற்பட்டதை கண்டதும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது போலீஸாரைப் பார்த்து இரண்டு சிறுவர்கள் ஓட முயற்சித்துள்ளனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கானத்தூரில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவிலில் கடந்த மாதம் திருவிழா நடந்தது. அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வாங்கி வெடிக்கப்பட்டன. அதில் மீதம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை குப்பையில் போட்டு அழிக்க முடிவு செய்து உள்ளனர். ஆனால் அதை அழிக்காமல் பதுக்கி வைத்து 3 இடங்களில் தற்போது வெடிக்க செய்து இருப்பதாக சிறுவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் சொல்வது உண்மையா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், போலீஸாருக்கு வேறு சந்தேகமும் வந்துள்ளதாம். அதாவது, கச்சத்தீவை மீட்கக்கோரி சிவசேனா கட்சி நிர்வாகிகள் கர்ணன் என்பவரது தலைமையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைப்பயணம் வந்தனர்.
இந்த நேரத்தில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் அவர்களைக் குறி வைத்து திட்டமிடப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.