திருப்பதியில் கைதான 32 தமிழர்களுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
சென்னை: செம்மரம் வெட்ட வந்ததாக கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்ய்பட்ட 32 பேரும் திருப்பதி 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள நகரி, புத்தூர், சித்தூர், ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் பஸ், ரயில்களில் வரும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லும் ஆந்திர போலீஸார் செம்மரம் கடத்தியதாக பொய் வழக்கு போடுவது தொடர்கதையாகி வருகிறது.

சேஷாசலம் வனப்பகுதியில் 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பின்னர், இது தொடர்பாக 400க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் எந்த தவறும் செய்யாதபோதிலும், இவர்கள் சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். இறுதியில் இவர்கள் அனைவரும் நிரபராதிகள் எனக் கூறி திருப்பதி நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதிக்கு வந்த 32 தமிழர்களை, பின்தொடர்ந்து சென்ற ரேணி குண்டா போலீசார் கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் எனும் இடத்தில் கைது செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து ஆயுதங்கள், செம்மரக் கட்டைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
நேற்று மாலை ரேணிகுண்டா டிஎஸ்பி நஞ்சுண்டப்பா, இன்ஸ்பெக்டர் பாலய்யா ஆகியோர் செய்தியாளர்கள் கூட்டத்தில் 32 பேரை ஆஜர்படுத்தி பேசினார். அப்போது கோடாரிகள், கத்திகளை அவர்கள் முன்பு வைத்தனர்.
அப்போது அவர் செம்மரம் கடத்தும் கும்பலை சேர்ந்த இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை திருப்பதிக்கு வந்தனர். இவர்களை கைது செய்துள்ளோம் என்று கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 29 பேர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 32 பேர் கைதாகியுள்ளனர். இவர்களிடம் இருந்து 22 கோடரிகள், கத்தி, கடப்பாரை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.
இதனிடையே செம்மரம் வெட்ட வந்ததாக கைது செய்யப்பட்ட 32 தமிழர்களும் திருப்பதி 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications