தமிழக ஓட்டை பேருந்தில் இருந்து சாலையில் விழுந்து உயிர் பிழைத்த பெண்... 4 பேர் சஸ்பெண்ட்
நெல்லை: நெல்லை அருகே அரசுப் பேருந்தின் ஓட்டை வழியே சாலையில் விழுந்து பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் எதிரொலியாக 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் காயன்குளத்தை சார்ந்தவர் ராஜன். இவர் தனது மனைவி சுவாதியோடு 15ம் தேதி இராஜபாளையத்தில் உள்ள உறவினர் ஒருவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தென்காசிக்கு வந்துள்ளார். அப்போது கொட்டராக்கரைக்கு தமிழக அரசு பேருந்து ஓன்று வந்துள்ளது. அதில் கணவனும், மனைவியும் ஏறியுள்ளனர்.
பேருந்து புனலூர் கே.எஸ்.ஆர்.டி.சி.பேருந்து நிலையம் அருகே மாலையில் சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் உள்ளே பின் சக்கரத்தை ஒட்டிய இருக்கைக்கு கீழ் இருந்த பேருந்தின் பிளாட்பாரம் உடைந்து விழுந்தது. இதன் வழியாக சுவாதி பேருந்தில் இருந்து கீழே சாலையில் விழுந்தார்.
இதனைக் கண்டு ராஜனும், மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தத்தைத் தொடர்ந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் பேருந்தை நிறுத்தியுள்ளார். அதிர்ஷ்ட வசமாக பேருந்தின் உள்ளிருந்து சாலையில் விழுந்த சுவாதிக்கு பெரிய காயம் ஏதும் இல்லை. இடது கை தோள்பட்டை மட்டும் சேதமடைந்தது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்து சுவாதியை காப்பாற்றி புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விரைந்து வந்த புனலூர் போலீசார் பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுனர் சுப்ரமணியன், நடத்துனர் ஐயப்பன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரி, பணிமனை மேலாளர், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர் மீது ஆய்வாளர் சிவா பிரகாஷ் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் பேருந்தின் தரம் குறித்தும் புனலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பேருந்தை முழுமையாக சோதனை செய்துள்ளனர்.
கேரளமாநிலம் புனலூரில் நடந்த விபத்து தொடர்பாக தென்காசி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இரண்டுபேர், விபத்து ஏற்பட்ட பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.