ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 தமிழர்கள்- மெக்காவிலேயே உடல்கள் நல்லடக்கம்!
சென்னை: மெக்காவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 4 பேர் தமிழர்கள் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சம் பேர் மெக்காவுக்கு ஹஜ் பயணம் சென்று உள்ளனர். இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் பேர் சென்றுள்ளனர்.
மெக்கா அருகே மினா நகரில் நேற்று முன்தினம் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 700 க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். மேலும் 800க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உயிர் இழந்தவர்களில் 14 பேர் இந்தியர் என்பதும், அதில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். உயிரிழந்த தமிழர்கள் 4 பேரின் உடல்களும் மெக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இறந்தவர்களில் ஒருவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த சம்சுதீன். 70 வயதான இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பி அங்கு வசித்து வந்தார். இவர் தனது மனைவி சம்சாத் பேகத்துடன் மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் சென்று இருந்தார். அவர் அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சம்சுதீன் இறந்து விட்டார். சம்சுதீனின் உடல் மெக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
நெரிசலில் சிக்கி பலியான மற்றொருவர் திருச்சி தென்னூர் அண்ணா நகர் சிவபிரகாசம் சாலையைச் சேர்ந்த முகமது அமானுல்லாவின் மனைவி ரெமிஜான். முகமது அமானுல்லா திருச்சி சிங்காரத்தோப்பில் ஜவுளிக் கடை வைத்துள்ளார். இவர் தனது மனைவி ரெமிஜான், மகள் நிசாத், மருமகன் அமானுல்லா ஆகியோருடன் ஹஜ் பயணம் சென்றார்.
நேற்று முன்தினம் மாலை மெக்காவில் நெரிசலில் ஏராளமானோர் உயிர் இழந்ததாக செய்தி வெளியானதும் முகமது அமானுல்லாவை உறவினர்கள் திருச்சியில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ரெமிஜான் இறந்த தகவல் தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
நெரிசலில் சிக்கி பலியான மற்றொரு பெண் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டை மதார்சாகிப் தெருவைச் சேர்ந்த கதிர் அகமதுவின் மனைவி ஷமிம்முன்னிஷா. இவர்களுக்கு அப்சல் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கதிர் அகமது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்சல் குடியாத்தத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணி புரிகிறார்.
கடந்த 6 ஆம் தேதி ஷமிம்முன்னிஷாவும், அப்சலும் புனித ஹஜ் பயணமாக மெக்காவுக்கு புறப்பட்டு சென்றனர். இருவரும் நேற்று முன்தினம் மினா நகரில் நடந்த சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஷமிம் முன்னிஷா உயிர் இழந்தார். இந்த தகவலை அப்சல், அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்,
நெரிசலில் சிக்கி பலியான மற்றொருவர் நெல்லை மாவட்டம் தென்காசி அரிப்புக்காரத் தெருவைச் சேர்ந்த முகைதீன் பிச்சை. கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது மனைவி ரெஜினா பேகத்துடன் ஹஜ் யாத்திரை சென்றார். முகைதீன் பிச்சை நெரிசலில் சிக்கி பலியான விவரம் உறுதி செய்யப்பட்டு, தென்காசியில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. அவருடைய மனைவி ரெஜினா பேகம் பத்திரமாக இருப்பதாகவும் தகவல் வந்தது. முகைதீன் பிச்சைக்கு ஷேக் முகம்மது, ரெசவு மைதீன் ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது.
பலியான நான்கு பேரின் உடல்களும் மெக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.