5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... துணைவேந்தர் ஊழல்களை அம்பலப்படுத்திய மஞ்சுநாதாவும் திடீர் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் லஞ்ச ஒழிப்பு துறையின் ஏடிஜிபியாக இருந்த மஞ்சுநாதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்ற பட்டியலை உள்துறை செயலாளர் வெளியிட்டார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபியாக இருந்த மஞ்சுநாதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அத்துறையின் ஏடிஜிபியாக கே ஜெயந்த் முரளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த மஞ்சுநாதா தொழில்நுட்பப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்த துறை என்றே கூறப்படுகிறது.
தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக ஆர்.கே.உபாத்யாய், தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலராக டி.பி.ரகுநாத் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டும் தமிழக வனத்துறை தலைமை அதிகாரியாக இருந்த பசவராஜ் ஆராய்ச்சி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டும் உள்ளனர்.
துணைவேந்தர்கள் ஊழல்களை அம்பலப்படுத்தியவர் மஞ்சுநாதா. முன்னாள் துணைவேந்தர்கள் வணங்காமுடி, கணபதி, ராஜாராம் மீது வழக்கு பதிவு செய்தவர். அரசு அலுவலகங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுநாதாவின் லஞ்ச ஒழிப்பு சோதனையால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காகவும் அதேபோல் துணைவேந்தர்களின் வீடுகளில் நடந்த சோதனையால் அரசு மீது எழுந்த விமர்சனங்களாலும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு சோதனைகளை தடுக்கவே மஞ்சுநாதா மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.