இந்தியாவில் 1,34,799 பேர் தற்கொலை: தமிழகம் நம்பர் 1
சென்னை: இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார்.
அதில், 2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம் நம்பர் 1
தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்
இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 16,112 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 3-வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 14,957 கடந்த ஆண்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா
ஆந்திர மாநிலத்தில் 14,238 பேரும், கர்நாடக மாநிலத்தில் 12,753 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவயது தற்கொலைகள்
தற்கொலை செய்துகொண்ட மூன்று பேரில் ஒருவர் குறைந்த வயதுடையவராக இருக்கின்றார். தேசிய அளவில் தற்கொலைகளால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் என்பது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.
தேர்வு தோல்வி
பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஏற்படும் தோல்வி காரணமாக தினசரி 7பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் புள்ளிவிபரம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உயிரை மாய்க்கும் ஆண்கள்
கடந்த வருடம் தற்கொலை செய்தவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தேசிய அளவில் ஆண்களின் தற்கொலை பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் முறையே 76.1 மற்றும் 75.3 சதவிகிதம் என உள்ளது.
குடும்பத்தகராறு
இவர்களில் குடும்பத் தகராறு காரணமாக 24 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 19.6 சதவீதம் பேரும், காதல் பிரச்சினைகளால் தற்கொலை செய்தவர்கள் 3.3 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2012ல் தற்கொலைகள்
கடந்த 2012ம் ஆண்டு 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிபரம் தெரிந்துள்ளது. இது 2013ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
தேசிய குற்றவியல் பதிவு அமைப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு, ஒவ்வொரு வருடமும் புள்ளி விவரத்தை சேகரித்து வெளியிடுகிறது. இதற்கு உதவியாக, தேசிய குற்றவியல் பதிவு அமைப்பு வெளியிடும் புள்ளி விவரங்களையும் எடுத்துக் கொள்கிறது.