கர்ப்பப் பையில் போட்ட தையலை அகற்ற ஆபரேஷன்.. இளம் பெண் மரணம்.. உறவினர்கள் ஆவேசம்.. போராட்டம்
கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்,
Recommended Video
சென்னை: ஆவடி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாதம் கர்ப்பிணி உயிரிழந்ததால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில்,சோழன் நகரை சேர்ந்தவர் சுகுமார் 36. தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா 32. 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கருத்தரிப்பில் இருந்தே திருமுல்லைவாயிலில் ஷெரிஷ் என்ற தனியார் மருத்துவமனையில் உஷா சிகிச்சை பெற்று வந்துள்ளார். உஷாவிற்கு சிகிச்சைக்காக கர்ப்பப்பையில் தையல் போடப்பட்டுள்ளது. பின்னர் தற்போது 8 மாத முடிவில் அந்த தையலை அகற்ற வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் உஷா அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே தையலை அகற்றும் சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென உஷா உயிர் இழந்துள்ளார்.
இது குறித்து உஷாவின் கணவர் சுகுமார் தவறான சிகிச்சை காரணமாக உஷா உயிர் இழந்துள்ளதாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து உஷாவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் நேற்று மாலை திருமுல்லைவாயில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, உயிர் இழப்பிற்கு காரணமான ஷெரிஷ் மருத்துவமனையை உஷாவின் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதத்துடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த 5-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்த பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.