ஈரோட்டின் 8 வாக்குச்சாவடிகளில் “பெண்கள் ராஜ்ஜியம்”தான்- தேர்தல் ஆணையம் முடிவு
ஈரோடு: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் 8 தொகுதிகளுக்கு ஒரு வாக்குச்சாவடி பெண்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 99 ஆயிரத்து 450 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 92 ஆயிரத்து 438 பேர். பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 6 ஆயிரத்து 923 பேர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 485 பேர் அதிகமாக உள்ளனர்.தேர்தலை யொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 2114 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பெண்களே தேர்தல் நடத்தும் வாக்கு சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குசாவடி என்ற கணக்கில் பெண்களே தேர்தல் நடத்தும் வாக்கு சாவடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் மட்டுமே ஓட்டு போடும் வகையில் அமைக்கப்படும் இந்த வாக்குசாவடிகளில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு இடையன் காட்டு வலசு நடுநிலைப்பள்ளி, ஈரோடு மேற்கு தொகுதியில் சித்தோடு ராயர் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி தொகுதியில் கருந்தேவன் பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகள் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும், பெருந்துறை தொகுதியில் பெருந்துறை கிழக்கு பள்ளி, பவானி தொகுதியில் அம்மாப்பேட்டையில் உள்ள பெரியசாமி நடுநிலைப்பள்ளி, அந்தியூர் தொகுதியில் பள்ளி பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, கோபிதொகுதியில் குள்ளம் பாளையம் அரசு தொடக்க பள்ளி, பவானி சாகர் தொகுதியில் வேட சின்னனூர் தொடக்கப் பள்ளி ஆகிய 8 இடங்களில் பெண்களுக்கான வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.