9 மாவட்டங்களின் காவல் பெண் அதிகாரிகளின் கையில்...!
சென்னை: தமிழகத்தில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் பணியாற்றும் பெருமை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்துள்ளது.
அதாவது 9 மாவட்டங்களின் காவல்துறைக் கண்காணிப்பாளர்களாக பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த 9 அதிகாரிகளில் மிகவும் இளையவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஆர்.வி. ரம்யா பாரதி. 29 வயதுதான் ஆகிறது இந்த இளம் அதிகாரிக்கு. இவர் 22 வயதில் சர்வீஸுக்கு வந்தவர் என்பது முக்கியமானது.
பெண் அதிகாரிகள்
தமிழகத்தில் தற்போது பல்வேறு துறைகளிலும் பெண் அதிகாரிகள் அதிகம் பணியாற்றுகின்றனர். ஆங்காங்கு சிற்சில பிரச்சினைகள் இருந்தபோதும் அதையும் தாண்டி பெண் அதிகாரிகள் உற்சாகமாகப் பணியாற்றுவதைப் பார்க்க முடிகிறது.
காவல்துறை
காவல்துறையைப் பொறுத்தமட்டில் தற்போது 9 மாவட்டங்களில் எஸ்.பிக்களாக பெண்கள் உள்ளனர். தமிழகத்தில் உள்ள மொத்தம் 32 மாவட்டங்களில் சென்னையில் மட்டும்தான் எஸ்.பி. கிடையாது. மற்ற 31 மாவட்டங்களிலும் எஸ்.பிக்கள் கட்டுப்பாட்டில்தான் மாவட்ட நிர்வாகங்கள் உள்ளன. இதில் 9 மாவட்டங்கள் பெண்களின் கையில் உள்ளது.
இளம் அதிகாரி ரம்யா பாரதி
இந்த 9 பெண் அதிகாரிகளிலேயே மிகவும் இளையவர் கே.வி. ரம்யா பாரதிதான். 29 வயதாகும் இவர் 22 வயதில் காவல்துறைப் பணியில் சேர்ந்து சாதித்தவர் ஆவார். தற்போது இவர் கோவை புறநகர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு திருவண்ணாமலை எஸ்.பியாக இருந்தவர் இவர்.
செந்தில்குமாரி
வேலூர் எஸ்.பியாக இருக்கிறார் எஸ்.பி. செந்தில்குமாரி. அதேபோல காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி ஆகியோரும் பெண் காவல்துறை அதிகாரிகளாக வலம் வருகின்றனர்.
எஸ்.பி. பொன்னி
இதேபோல திருவண்ணாமலை எஸ்.பியான பொன்னியும் இளம் ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வருகிறார். இவர் தவிர புதுக்கோட்டை எஸ்.பியாக உமா நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் வந்திதா பாண்டே
கரூர் எஸ்.பியாக வந்திதா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல சேலம் எஸ்.பியாக சுப்புலட்சுமி பணியமர்த்தப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பியாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சோனல் சந்திரா
பெரம்பலூர் எஸ்.பியாக சோனல் சந்திரா அமர்த்தப்பட்டுள்ளார். இதுதவிர ஆணையர்களின் தலைமையில் உள்ள மாநகரங்களில் பல பெண் போலீஸ் கமிஷனர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.