ஆன்லைன் மூலம் கார் திருட்டை எளிதாக கண்டுபிடிக்க புதிய வசதி - ஏடிஜிபி பேட்டி
நாகர்கோவில்: ஆன்லைன் மூலம் கார் திருட்டை எளிதாக கண்டுபிடிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாகர்கோவில் ஏடிஜிபி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலத்துக்கு சென்று அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.
விரல் ரேகை பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், "தமிழக போலீஸ் துறையில் ஆன்லைன் வசதி செய்யப்பட்ட பின்பு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும், குற்றங்களை தடுப்பதும் மிகவும் எளிதாகி உள்ளது. குறிப்பாக பாஸ்போர்ட் விபரங்கள், அதில் உள்ள தகவல்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் விசாரிப்பதால் பணிச்சுமை குறைந்து, விபரங்களை சேகரிப்பதும் எளிதாகி உள்ளது.

அதோடு திருட்டு வாகனங்கள், காணாமல் போகும் வாகனங்கள், அனாதை பிணங்கள் ஆகியவை குறித்தும் எளிதில் விபரங்களை சேகரித்துவிடலாம். உதாராணமாக திருவட்டாரில் அனாதையாக நின்ற ஒரு வாகனம் பற்றிய விபரத்தை ஆன்லைன் மூலம் விசாரிக்க முற்பட்டபோது அது சென்னை வடபழனியில் உள்ள ஒரு திருட்டு வாகனம் என்பது உடனடியாக தெரியவந்தது. இப்படி எந்த வழக்குகளையும் ஆன்லைன் மூலம் எளிதாக கண்டுபிடிக்க முடியும். எனவே பொது மக்களும் இனி ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இதற்காக eservice.tn.police.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் இதுவரை 175 பேர் புகார் செய்துள்ளனர். அவர்களின் மனுக்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளன. இது போல 63 திருட்டு வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications