ஜெயலலிதா 67வது பிறந்தநாள்: அங்கபிரதட்சணம், தீச்சட்டி, பறவைக்காவடி அதிமுகவினர் படு ஜோர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் களை கட்டியுள்ளது. ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, தீச்சட்டி ஏந்துதல், பாலபிஷேகம், அன்னதானம், ரத்ததானம் என அதிமுக தொண்டர்களும், அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாகவே உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இலவச திருமணங்கள், சீர்வரிசைகள் கொடுப்பது என ஒருபுறம் நடக்க மறுபுறம் ரத்ததானம் செய்து தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மதுரையில் இந்த ஆண்டு பிரம்மாண்டமாக சித்திரை திருவிழா போல கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
67 பெண்கள் அங்கப் பிரதட்சணம்
தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் என்.கே.வத்சலா எம்சி ஏற்பாட்டில் மேற்கு சைதாப்பேட்டை கற்கட விநாயகர் கோவிலில் 67 பெண்கள் அங்கப்பிரதேட்சணம் செய்து வழிபட்டனர்.
அட வழிவிடுங்கப்பா
அம்மாவுக்காக பக்தியோடு உருளும் போது கூடவே போட்வோவிற்கு போஸ் கொடுக்க அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் திரண்டதால் உருள்வலம் வந்த மகளிர் அணியினர் சற்றே சங்கோஜத்தில் நெளிந்தனர்.
அமைச்சர் வளர்மதி டாப்பு
அம்மாவின் பிறந்தநாளை கடந்த ஒருவாரமாக கொண்டாடி வருகிறார் அமைச்சர் வளர்மதி. விளையாட்டுப்போட்டி நடத்துவதாகட்டும், பால்குடம் எடுப்பதாகட்டும், தீச்சட்டி ஏந்துவதாகட்டும் அனைத்தையும் செய்துவிட்டார் வளர்மதி.
பயபக்தியோடு வழிபாடு
சைதை இளங்காளியம்மன் கோவிலில் அமைச்சர் பா.வளர்மதி உள்பட 67 பெண்களும் தீச்சட்டி ஏந்தினார்கள். ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகிடவும், நீடூழி வாழவும் வேண்டி அவரது பெயர், நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்து மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் தொழு நோயாளிகள் 200 பேருக்கு போர்வை, சாப்பாட்டு தட்டு, ஏழைகளுக்கு சேலை உள்பட 670 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
ஜெயலலிதாவின் 67 -வது பிறந்த நாள் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறுதொடர் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட அதிமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அருள்மிகு சாந்தநாதர்ஆலய சன்னதியிலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் மாவட்டச் செயலாருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன் முன்னிலையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலம் தொடங்கியது.
5000 பால்குடம்
நாதஸ்வர இசைக்கச்சேரியுடன் 5000 பெண்களின் பால்குடம், முளைப்பாரி, பறவைகாவடி, கிரேன்பறவைகாவடி, யானை ஊர்வலம், தீச்சட்டி, மயிலாட்டம், மாடுஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என களைகட்டியது.
பிரம்மாண்ட ஊர்வலம்
கேரளகலைஞர்களின் சிங்காரமேளம், புரோகிதர்கள் ஊர்வலம், பொற்பனையான், விநாயகர், கருப்பர், அய்யனார் ஆகிய தெய்வங்களின் வேடம் அணிந்து ஊர்வலம், தமிழகத்தின் தலைசிறந்த நையாண்டி மேளம், கரகாட்டம், சிலாகுத்து, கேரள செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் முழங்கிட பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து 6667 நபர்களுக்கு மாபெரும் அறுசுவை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
113 ஜோடிகளுக்கு திருமணம்
தஞ்சை மாவட்டக் கழகம் சார்பில், தஞ்சாவூர் திலகர் திடலில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பந்தலில், தொடர்ந்து 7-வது ஆண்டாக, 113 ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஜோடிகளுக்கு மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. விழாவில், அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம், மாநகர மேயர், கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத்தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தாய் வீட்டு சீதனம்
மணமக்களுக்கு, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின், தாய் வீட்டு சீதனமாக தாலிக்கு 4 கிராம் தங்கம், குத்துவிளக்குகள், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, அண்டா, குடம் உள்ளிட்ட 67 வகையான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோருக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
ரத்ததானம்
உடுமலைப்பேட்டையில் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 67 பேர் ரத்த தானம் செய்தனர்.
மதுரையில் 25000 பேர் திரள
மதுரையில் ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பால்குடம், பறவை காவடியுடன் 25 ஆயிரம் பேர் திரளும் பிரம்மாண்ட பக்தி பரவசத்துடன் ஊர்வலம் நடக்கிறது . இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செய்து வருகிறது.
வைகை ஆற்றில் இருந்து
பிறந்தநாள் தினமான 24ஆம் தேதி காலை 7 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து பக்தி,பரவசத்துடன் ஊர்வலமாக செல்லுகிறார்கள். சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் இந்த பக்தி ஊர்வலம் திண்டுக்கல் சாலை மேலமாசிவீதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சென்று முடிவடைகிறது.
முருகனுக்கு பாலபிஷேகம்
இதனை தொடர்ந்து உற்சவருக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த பக்தி,பரவசமிக்க ஊர்வலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பால்குடத்துடன் பங்கேற்கின்றனர்.
அந்தரத்தில் பறந்து
அவர்களுடன் 35 பக்தர்கள் வேல் குத்தியும், 67 பேர் காவடி எடுத்தும் வருகின்றனர். மேலும் 11 பேர் அந்தரத்தில் பறந்தபடி , பறவை காவடி எடுத்தும் 3 பேர் மயில் காவடி எடுத்தும், 3 பேர் தங்களது உடலில் ஆயிரம் இடங்களில் வேல் குத்தியும் பக்தி,பரவசத்துடன் பங்கேற்கின்றனர்.
67 வில்வ மரங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஜெயலலிதா விரைவில் முதல்வர் ஆக வேண்டி கோவிலில் பிரகாரங்களில் 67 வில்வ மரங்கள் நடப்படுகின்றன. அதன் பின்னர் இளைஞர், இளம் பெண்கள் பாசறை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
பள்ளிவாசல், தேவாலயத்தில்
தொடர்ந்து தெற்குவாசலில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மலர் போர்வை போர்த்தி சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. கீழவாசலில் உள்ள செயிண்ட் மேரீஸ் தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தங்கத்தேர் இழுத்து
அன்றைய தினம் மதியம் அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகே 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. மாலையில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தங்கதேர் இழுக்கப்படுகிறது.
தங்க மோதிரம் பரிசு
ஜெயலலிதாவின் பிறந்த தினமான 24 ந்தேதி அதிகாலை 12 மணி முதல் அன்று இரவு 12 மணி வரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்கமோதிரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மோதிரங்கள் அனைத்தும் 26 ந்தேதி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அணிவிக்கிறார்.
சித்திரை திருவிழா
இந்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை மதுரையில் மற்றொரு சித்திரை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்று மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். எப்படியோ மக்கள் முதல்வர் பிறந்தநாளை மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் கொண்டாடினால் சரிதான்.