சுடுகாட்டுக்கு செல்ல பாதை கேட்டு போராடிய பொதுமக்கள்.. ஆபாசமாக பேசி சப்-இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல்!
திருப்பத்தூர்: உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் பாதை கேட்டு மறியல் செய்த பொதுமக்களை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு ஊராட்சி கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த கலா என்ற முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார்.

சாலை மறியல்
கலாவின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும்பொழுது அப்பகுதியில் உள்ள ஒரு சிலர் வழியை அடைத்து தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலம் என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆபாசமாக மிரட்டினார்
இது குறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் நாசி என்பவர் அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. ''மறியலில் ஈடுபட்டால் நான் உங்களை தொலைத்து விடுவேன்,

வைரல் வீடியோ
''இதுக்கு முன்னதாக உடல்களை எப்படி எடுத்து சென்றீர்களோ . அப்படியே எடுத்து செல்லுங்கள். அதையும் மீறி போராட்டம் என்று கூறி ரோட்டிற்கு யாராவது வந்தால் உங்களை தொலைத்து விடுவேன்'' என சிறப்பு உதவி ஆய்வாளர் நாசி மிக ஆபாசமாக பேசி உள்ளார். இவர் மக்களிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

நடவடிக்கை வேண்டும்
பொதுவாக ஒரு இடத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் அங்கு செல்லும் போலீசார், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்து அந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இதற்கு எதிர்மாறாக உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் பாதை கேட்டு மறியல் செய்த பொதுமக்களை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications