சிதம்பரம் நடராஜர் கோவில் குளத்தில் பழமையான மாணிக்கவாசகர் சிலை கண்டெடுப்பு!
கடலூர்: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் திருப்பாற்கடல் குளத்தில் தூர்வாரும் போது பழமையான மாணிக்கவாசகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் வேங்கான் தெருவிலுள்ள திருப்பாற்கடல் தீர்த்தகுளம் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினரால் தூர் வாரப்பட்டது.
அப்போது 60 செ.மீ உயரமும், 30 செ.மீ அகலமும் கொண்ட நின்ற நிலையிலான சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு:
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தொல்லியல் ஆய்வாளர் ஆ.சிவராமகிருஷ்ணன், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அஞ்சலிகை முத்திரை வடிவமைப்பு:
ஆய்வுக்கு பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், ''அஞ்சலிகை முத்திரையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
எளிய ஆடை தோற்றம்:
ஒருகால் உள்புறமும், ஒருகால் முன்புறம் வைத்த நிலையிலும், எளிய ஆடை உடுத்திய நிலையிலும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ருத்ராட்ச மாணிக்கவாசகர்:
தலையில் ருத்ராட்சங்களும், இரு கைகளின் உள்புறத்தில் ருத்ராட்சங்களுடன் மாணிக்கவாசகர் நின்ற நிலையில் சிலை உள்ளது.
12 ஆம் நூற்றாண்டு
முகம் சதைப் பற்றுடன் வட்ட வடிவுடன் அமைந்துள்ளது. ஆதலால், 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம். மேலும் குளத்தின் படிக்கட்டுகளில் 4 கல்வெட்டுகள் அமையப் பெற்றுள்ளன.
குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு:
இவை 3ஆம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டுகளாகும். மேலும் இக்கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications