வேடசந்தூர் அருகே வார்டு பிரிப்புக்கு எதிராக பேரூராட்சி அலுவலகத்திலேயே சமைத்து கிராம மக்கள் போராட்டம்
வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தை 3- ஆகப் பிரித்து குக்கிராமங்களில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் இணைத்ததைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
Recommended Video

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தை 3- ஆகப் பிரித்து குக்கிராமங்களில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் இணைத்ததைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அத்துடன் பேரூராட்சி நிர்வாகம் சரியான பதிலை தெரிவிக்காததால் அந்த அலுவலகத்திலேயே சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
வேடசந்தூர் வட்டம் எரியோடு பேரூராட்சிக்குட்பட்டது எ.பண்ணைப்பட்டி. இந்த கிராமம் ஒரு வார்டாக தனிப் பிரதிநிதித்துவத்துடன் இருந்து வருகிறது. அருகே உள்ள கிராமங்களான மணியகாரன்பட்டி, மத்தனம்பட்டி சேர்ந்தவர்கள் வாக்களிக்க கூட எ. பண்ணைப்பட்டிக்கு வந்து சென்றனர்.

எரியோடு பேரூராட்சியின் தலைவர்களாக, துணைத் தலைவர்களாக எ. பண்ணைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பதவியும் வகித்து உள்ளனர். இந்நிலையில் எ. பண்ணைப்பட்டியின் தனி பிரதிநிதித்துவத்தை பறித்து கிராமத்தையே 3 கூறுகளாகப் பிரித்து குக்கிராமங்களான மத்தனம்பட்டி, மணியகாரன்பட்டியில் உருவாக்கப்பட்ட வார்டுகளுடன் எரியோரு பேரூராட்சி இணைத்துவிட்டது. இந்த இணைப்பிலும் கூட பண்ணைப்பட்டிக்கு பிரதிநிதித்துவம் சென்றுவிடக் கூடாது என்கிற வகையில் வீடுகள் எண்ணிக்கை கூறு போடப்பட்டிருக்கிறது என்பது அந்த கிராம மக்களின் குற்றச்சாட்டு.,

இது தொடர்பாக எரியோடு பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுப் பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து எ. பண்ணைப்பட்டி கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு எரியோடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அத்துடன் பேரூராட்சி நிர்வாகம் சரியான பதிலை தெரிவிக்காததால் அந்த அலுவலகத்திலேயே சமையல் செய்து போராட்டம் நடத்தினர். இதனால் எரியோடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது,












Click it and Unblock the Notifications