ரொம்பவே கேவலமான ”புளிப்பு” பால்கோவா - அகப்படுகிறது ஆவின் பால் நிறுவனம்?
கோவை: கோவையில் புளிப்பான பால்கோவாவை விற்பனைச் செய்துள்ளதாகவும், அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்று ஆவின் நிறுவனம் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேகி நூடுல்ஸ், நெஸ்லே பால் பவுடர், செர்லாக், காம்ப்ளான் என அடுத்தடுத்த உணவு பொருட்கள் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் உணவு பொருளான பால் பேடாவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏற்கனவே பால் பாக்கெட்டில் சோப்புத்தூள் கலப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்துவருவது ஒருப்பக்கம் இருந்தாலும் தற்போது இந்தப் புகார் பூதாகரமாக வடிவெடுக்கும் என்று தெரிகின்றது.
இது தொடர்பாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறையிடம் ஆவின் நிறுவனம் மீது புகார் தெரிவித்துள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் புஸ்பானந்தம்.
கோவை, இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் புஸ்பானந்தம். இவர் நேற்று தடாகம் ரோட்டில் உள்ள ஆவின் பால் பூத்தில் பால்கோவா ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு சென்று சாப்பிட்ட போது அதன் சுவை புளிப்பாக இருந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பால்கோவாவின் தரமும் மோசமானதாக இருந்ததை உணர்ந்த புஸ்பானந்தம், அதன் காலாவதி தேதியை பார்த்த போது, அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து ஆவின் மீது நடவடிக்கை எடுக்கவும், கோவை மாவட்டத்தில் விற்பனையாகும் பால்கோவாவை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக புஸ்பானந்தம் கூறுகையில், "நேற்று இரவு தடாகம் ரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ரூபாய் 40க்கு பால்கோவா வாங்கினேன். வீட்டுக்கு வந்து சாப்பிட்ட போது ரொம்ப மோசமாக இருந்தது. இனிப்புக்கு பதிலாக புளித்தது. அதனால் சாப்பிடாமல் வைத்துவிட்டு அப்படியே பாக்கெட்டில் காலாவதி தேதியை சரிபார்த்தேன். ஆனால் அதில விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லை. எனவே, இதை உடனே தடை செய்ய வேண்டும். இதை விற்பனை செய்த கடை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ஆனால், இந்த புகார் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அரசு நிறுவனமான ஆவின் மீதான புகார் என்பதால், இந்த புகார் மீது அடிப்படையான நடவடிக்கைகளை கூட அதிகாரிகள் எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. ஆவின் நிறுவன பொருளை எப்படி ஆய்வுக்குட்படுத்துவது? ஆவின் கடையில் எப்படி ஆய்வு நடத்துவது என தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.