முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகை வரலட்சுமி திடீர் சந்திப்பு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகை வரலட்சுமி இன்று திடீரென சந்தித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகை வரலட்சுமி இன்று திடீரென சந்தித்துள்ளார். அவர் தொடங்கியுள்ள பெண்கள் பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாக தெரிகிறது.
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு நடிகைகள் மட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அனைத்து பெண்களுக்கும் உதவும் என அவர் தெரிவித்தார்.
முன்னணி நடிகை ஒருவர் கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நடிககை வரலட்சுமி தன்னிடம் முன்னணி டிவி சேனல் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தவறாக பேசியதாக தெரிவித்தார்
வேவ் சக்தி
பின்னர் பெண்களின் பாதுகாப்புக்காக அவர் புது அமைப்பு ஒன்றை கடந்த ஒன்றாம் தேதி தொடங்கினார். வேவ் சக்தி என அந்த பாதுகாப்பு அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது.
முதல்வருடன் சந்திப்பு
இந்நிலையில் வரலட்சுமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று நேரில் சந்தித்தார். அப்போது தனது பெண்கள் பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக விளக்கியதாக தெரிகிறது.
பெண்கள் பாதிப்பு
இதைத்தொடர்ந்து வரலக்ஷ்மி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாலியல் பலாத்காரங்களால் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.
6 மாதத்தில் தீர்ப்பு
மாவட்டம் தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தனது கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.