30ம் தேதி முதல் 3 நாட்களுக்கு அதிமுக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள்: ஜெ.
சென்னை: அதிமுக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரும் 30ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
வரலாற்று சிறப்புமிக்க தொடர் வெற்றியை பெற்று தமிழக மக்களின் ஆதரவோடும், நல்வாழ்த்துகளோடும் 6-வது முறையாக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், பல்வேறு நடவடிக்கைகள் வழியாகத் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைத்திருக்கிறேன்.
முன்னோடி
மக்கள் நலப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் நாட்டிற்கே முன்னோடியாகத் திகழும் எனது தலைமையிலான அரசின் 2016-2017-ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்ட அறிக்கை சட்டமன்றத்தில் 21-7-2016 அன்று தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
கூட்டங்கள்
இந்தப் புதிய பட்ஜெட் வழியாக தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களை மக்கள் அனைவரும் புரிந்து மகிழும் வண்ணம் ‘அ.தி.மு.க. அரசின் 2016-2017-ம் ஆண்டிற்கான பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள்' வருகின்ற 30-7-2016 முதல் 1-8-2016 வரை 3 நாட்கள் அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும்.
நிர்வாகிகள்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.
கேட்டுக் கொள்கிறேன்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரும், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று முன்னேறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை பொதுக்கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றின் வழியாக மட்டுமின்றி நவீன தொடர்பு வழிகளான இணையம் மற்றும் டிஜிட்டல்-மின்னணு சாதனங்கள் வழியாகவும் விரிவாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.