ஜெ.வை முந்திய ஓபிஎஸ்... எல்லாம் திமுகவின் சதி என்கிறது அதிமுக ஐ.டி.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளி, இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் மாநில அளவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலைத்தள பிரபலமாகியிருக்கிறார். இந்திய அளவில் டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்தார் ஓபிஎஸ், இது எல்லாம் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுக செய்த சதி என்று அதிமுகவின் ஐ.டி அணி குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாற்றாக இரண்டுமுறை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவர் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, அவரின் முழு நம்பிக்கையை பெற்றவர் என்பதால் பன்னீர் செல்வத்தை இரண்டு முறை முதல்வராக நியமனம் செய்தார் ஜெயலலிதா. அவரும் முதல்வர் நாற்காலியில் கூட அமராமல் ஆட்சி செய்ததோடு பத்திரமாக ஜெயலலிதாவிடம் திரும்ப ஒப்படைத்தார்.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்திக்காமல், இருமுறை தமிழகத்தின் முதல்வர் என்ற அந்தஸ்தை பன்னீர் செல்வம் அடைந்தது தமிழகத்திற்கு புதியது. இது அதிமுக தவிர மற்ற அரசியல் கட்சிகளிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம்.
ஓபிஎஸ்
தமிழக அமைச்சரவையில், இரண்டாம் இடத்தில் இருப்பவர், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம். முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. இதன் காரணமாக, கட்சியில் ஐவரணிக்கு தலைமை வகிக்கிறார். ஆனால், சில தினங்களுக்கு முன், அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
ஆதரவாளர்கள் பதவி பறிப்பு
2016 சட்டமன்ற தேர்தலில் தான் விரும்பும் நபர்களுக்கு வேட்பாளர் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 100 பேரிடம் கோடிகளில் தொகைப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது. இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரது ஆதரவாளர்கள் பதவி பறிக்கப்படுவதாக, பேசப்பட்டது.
தனிக்கட்சி தொடங்க அழைப்பு
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் ஓரங்கட்டப்படுவதாக எழுந்த தகவலை அடுத்து, 'தலைவா... வீறு கொண்டு எழுந்து வா!' மற்றும், 'குனிந்தது போதும்; தலைமை ஏற்க வா!' என்றும், பன்னீர்செல்வம் படம் போட்டு, சமூக வலைத்தளங்களில், பல்வேறு தகவல்கள் வலம் வந்தன.
டுவிட்டரில் டிரெண்ட்
அதே போல டுவிட்டர் பக்கத்தில் #OPS4CM என இந்திய அளவில் ஓபிஎஸ் டிரெண்ட் ஆனார். ஓபிஎஸ் மீண்டும் முதல்வராகவேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டனர்.
கூகுளில் தேடல்
இந்நிலையில் இந்த விவகாரங்கள் ஊடகங்களிளும், இணையதளங்களிலும் செய்திகளாக வெளியாகி வியாழக்கிழமை பரபரப்பை உண்டாக்கியிருந்தது. அதன் விளைவாக கூகுளில் ஓபிஎஸ் அதிகம் தேடப்பட்டுள்ளார் என்று புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
கூகுளில் தேடல்
கூகுள் ட்ரெண்டில் இந்தத் தேடல் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. தமிழகத்தின் சென்னை, கோவை ,மதுரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பன்னீர் செல்வமே ட்ரெண்டில் இருந்துள்ளார். அதில் பாதியளவே ஜெயலலிதாவை இணையதளங்களில் தேடியுள்ளனர்.
இது உண்மையா? பொய்யா?
ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் அதிமுகவில் பன்னீர் செல்வம் செல்வாக்குப் பெற்று வருகிறார் என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் இணையதள வாசிகள். இது, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வெளியிடப்படுகிறதா அல்லது அவரை கவிழ்த்து விட வெளியிடப்படுகிறதா என புரியாமல், அதிமுகவினர் தவித்தனர்.
திமுகவின் சதி
இந்நிலையில், பன்னீர்செல்வத்தை குறிவைத்து, திமுகவினர் சமூக வலைதளங்களில், இதுபோன்ற விஷம தகவல்களை வெளியிடுவதாக, அதிமுக குற்றம் சாட்டி உள்ளது. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், இதுகுறித்து 'வாட்ஸ் ஆப்' ஆடியோ வெளியிடப்பட்டது.
திமுக மீது குற்றச்சாட்டு
ராஜிவ் கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்று, சிறையில் உள்ள, ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பான செய்தி மக்களிடம் சென்ற டைவதை தடுக்க, அமைச்சர் பன்னீர்செல்வத்தை மையப்படுத்தி, தி.மு.கவினர் பல்வேறு தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர் கட்சி தலைமை உத்தரவின்படி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு இறுதி பணியில் தீவிரமாக உள்ளார், என அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகிரி திமுக
அது மட்டுமல்லாது, திமுகவில் அழகிரியா, ஸ்டாலினா என விவாதம் நடக்கும் நிலையில், அடுத்த வீட்டு ஜன்னலை ஏன் எட்டி பார்க்கிறீர்கள்' என கேள்வி எழுப்பியதுடன், 'அழகிரி தான், திமுக என, மீம்ஸ் தட்டி விட்டுள்ளனர். அதிமுக - திமுக இடையிலான, சமூக வலைத்தள யுத்தம் மீண்டும் துவங்கி உள்ளது.