அமமுகவுடன் அதிமுக சேர வேண்டும்.. சூலூர் கனகராஜ் அதிரடி பேட்டியால் பரபரப்பு!
கோவை: அதிமுகவும் அமமுகவும் சேர்ந்தால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் என சூலூர் எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்திக்க நேரம் கேட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த டிடிவி தினகரன் ஓபிஎஸ் தன்னை சந்திக்க நேரம் கேட்டது உண்மைதான் என்றார். மேலும் தங்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியதற்கு ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டதாகவும் தினகரன் தெரிவித்தார்.
அதிமுக மறுப்பு
தினகரனின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமமுகவினரின் குற்றச்சாட்டுகளையும் கருத்துக்களையும் அதிமுக நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
உற்சாகமாக உள்ளது
இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான கனகராஜ் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள கருத்து கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு எங்களை போன்ற தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
அதிமுக-அமமுக சேரவேண்டும்
திமுகவை வேர் அறுக்க அதிமுக- அமமுக ஒன்று சேரவேண்டும். விரைவில் இரு கட்சி தலைமையும் நல்ல முடிவை எடுத்து தொண்டர்களுக்கு அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆட்சியை காப்பாற்ற முடியும்
அதிமுக - அமமுக சேர்ந்தால்தான் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும். தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருக்கலாம். அப்படி கேட்டிருந்தால் அதில் தவறு இல்லை.
ஓபிஎஸ் முயற்சி
அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் தினகரனை கட்சியில் சேர்த்து வலுப்படுத்துவார்கள். இரு கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் ஓபிஎஸ் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
கூடுதல் குழப்பம்
குருபெயர்ச்சி வந்தவுடன் அதிமுகவிற்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது என்றும், அனைத்து அணிகளும் ஒன்று சேர்ந்தால்தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும். இவ்வாறு சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு கட்சிக்குள் கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.