அதிமுகவில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை.. தினகரனை சந்தித்த விஜிலா சத்யானந்த் எம்பி பேட்டி
அதிமுகவில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று ராஜ்யசபா எம்.பி.விஜிலா சத்யானந்த் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரனை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிவி தினகரன். ஜாமீனில் வெளியே வந்திருக்கும் டிடிவி தினகரனால் மீண்டும் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள தினகரனின் வீட்டுக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சென்று அவரை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இரு அணிகளாக இருந்த அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக உருவாகியுள்ளது.
ஆனால் தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்து விட்டனர். துணை பொது செயலாளரான தம்மை ஒதுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை என கூறியுள்ள தினகரனுக்கு வெளிப்படையாகவே 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்.பி. விஜிலா சத்யானந்த் இன்று மாலை டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார். தினகரனை அடையாறு இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மேலும் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமியும் தினகரனை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜிலா சத்யானந்த், அதிமுகவில் 3வது அணிக்கு வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார். மேலும் நட்பு ரீதியாக தினகரனை தாம் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.