மின் இணைப்பு தர ரூ.15,000 லஞ்சம் கேட்ட மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் கைது
கோவை: கோவையில் வீட்டு மின் இணைப்பு வழங்க ரூபாய் 15,000 லஞ்சம் கேட்ட உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆவாரம்பாளையம், புது சித்தாபுதூரைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி. இவர் தான் கட்டிய புது வீட்டுக்கு மின் இணைப்பு கோரி ஆவாரம்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்து பல நாள்களாகியும் அவரது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பாலதண்டபாணி சார்பில் கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
அப்புகாரில் ஆவாரம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளரான மணிவேல் என்பவர் தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், பணத்தை கொடுத்தால் மட்டுமே அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு மின் இணைப்பு வழங்க முடியும் என கூறுவதாக அப்புகாரில் கூறியிருந்தார்.
ஏற்கனவே, செயற்பொறியாளர் மணிவேலிடம் தான் ரூபாய் 5,000 பணம் கொடுத்துள்ளதகவும், முழுப் பணத்தையும் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கமுடியும் என அவர் கூறுகிறார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஊழல் மற்றும் கையூட்டு ஒழிப்பு காவல்துறையினர் வழிகாட்டுதலின் படி, புதன்கிழமை பகல் மீதி ரூபாய் 10,000 பணத்தை தருவதாகக் கூறிய பாலதண்டபாணி நேற்று பிற்பகல் ஆவாரம்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் வைத்து செயற்பொறியாளர் மணிவேலிடம் பணத்தைக் கொடுத்தார்.
உடனே மின்வாரிய அலுவலகத்துக்குள் சென்ற டி.எஸ்.பி. முருகேசன், ஆய்வாளர்கள் ஆறுமுகம், ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய காரணத்துக்காக மணிவேலை கைது செய்தனர்.