4 நாட்களுக்குப் பிறகு தலைமை செயலகத்தை எட்டிப்பார்த்த 'ஓபிஎஸ்'
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல் தலைமைச் செயலகம் பக்கமே வராத முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று தமது அலுவலகத்தில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 11-ம் தேதி தீர்ப்பு வெளியானது. வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
வரும் 22-ந் தேதி காலை அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டது. இதனால் 23-ந் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானதற்கு முதல் நாளான கடந்த 10-ந் தேதியில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. கடந்த சில நாட்களாக தலைமைச் செயலகம் பரபரப்பின்றி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 11:20 மணி அளவில் திடீரென தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கமான பணிகளை மேற்கொண்டார். பின்னர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பகல் 1 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் வந்தாலும், மற்ற அமைச்சர்கள் யாரும் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. முதல்வராக ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் பொறுப்பேற்கலாம் என்பதால், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.