ஜெ. விடுதலைக்காக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை: ரத்தக் கையெழுத்து… தீச்சட்டி, யாகம்!
சென்னை: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா விரைவில் விடுதலை பெறவேண்டி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்கள், கவுன்சிலர்கள், சாதாரண தொண்டர்கள் வரை பலரும் பலவித போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டி ரத்தக் கையெழுத்துப்போட்டு ஆளுநர், குடியரசுத்தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர் அதிமுகவினர்.
இன்று அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் 500 அதிமுக தொண்டர்கள் சைதை இளங்காளியம்மன் கோவிலில் தீச்சட்டி ஏந்தி வழிபாடு மேற்கொண்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி அதிமுகவினர் ஒருபுறம் போராட்டமும், மறுபுறம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரத்தக் கையெழுத்து இயக்கம்
ஜெயலலிதாவின் விடுதலையை வலியுறுத்தி மேற்கு மாம்பலத்தில் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் தலைமையில் அதிமுகவினர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். 2500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தங்கள் ரத்தத்தினால் கையெழுத்துப்போட்டு குடியரசுத்தலைவருக்கும்,ஆளுநருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.
பிள்ளையாருக்கு யாகம்
கழக இலக்கிய அணி சார்பில் அரசினர் தோட்டத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 108 யாகப் பொருட்களை அக்னியில் போட்டு வேத விற்பன்னர்கள் யாக வேள்வியை நடத்தினார்கள். இதில் அமைச்சர் பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளர் முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
500 தொண்டர்கள் தீச்சட்டி
இன்று அதிகாலை 4 மணியளவில் சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் அமைச்சர் பா.வளர்மதி தீச்சட்டி ஏந்தினார். அவருடன் 500 தொண்டர்களும் தீச்சட்டி எடுத்து கோவிலை வலம் வந்தனர்.
ஜெ.பேரில் அர்ச்சனை
பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்து உடனடியாக விடுதலை பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் மேயர் சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர் விருகை ரவி, கவுன்சிலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
108 குத்துவிளக்கு பூஜை
அதை தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார்கள்.
1008 கலச பூஜை
மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் 1008 கலசபூஜையும், யாக வேள்வியும் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு 1008 கலசங்களில் இருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் பா.வளர்மதி, டி.கே.எம்.சின்னையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.