செ.ம.வேலுச்சாமியின் கல்தாவிற்கு காரணமான விபத்து!... கார் பறிமுதல்
செ.ம.வேலுச்சாமி, கோவை மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலராகவும், கோவை மேயராகவும் பணியாற்றி வந்தார். செவ்வாய்கிழமை மாலையில், இவரிடமிருந்து மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டு, புறநகர் மாவட்டச் செயலரும், அமைச்சருமான வேலுமணியிடம் ஒப்படைப்பதாக, அ.தி.மு.க., தலைமை அறிவித்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், செவ்வாய்கிழமை இரவு, தன் மேயர் பதவியை ராஜினாமா செய்த, செ.ம.வேலுச்சாமி, அதற்கான கடிதத்தை மாநகராட்சி கமிஷனர் லதாவிடம் ஒப்படைத்தார்.
இதற்கு காரணம் லோக்சபா தேர்தலில் குறைந்தவாக்குகள் என்று காரணமாக கூறப்பட்டாலும் செவ்வாய்கிழமை நடைபெற்ற விபத்துதான் முக்கியகாரணமாகக் கூறப்படுகிறது.
கார் விபத்து
கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டசபை தொகுதியில், செவ்வாய்கிழமை காலை நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; அதற்காக தன் வாகனத்தில் மேயர் சென்றுள்ளார்; அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு சென்று திரும்பும்போது, ஒரு வழிப்பாதையில் அத்துமீறி, இவரது வாகனம் அதிவேகத்தில் சென்றுள்ளது.
அப்போது, எதிரில் வந்த ஹீரோ ஹோண்டா பைக் மீது மோதியது.
காயமடைந்த இளைஞர்
இதில், அந்த வண்டியை ஓட்டி வந்த சந்திரசேகரன், 31, என்பவர், தூக்கி வீசப்பட்டார்; தலையில் அவருக்கு பலமாக அடிபட்டு உள்ளது; ஆனால், மேயரின் வாகனம் நிற்கவில்லை; அதே வேகத்தில் சென்று விட்டது. வண்டி எண்ணையும், அதிலிருந்த, 'மேயர், கோவை மாநகராட்சி' பலகையையும் பார்த்த பலரும், இது பற்றி போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
காயமடைந்த சந்திரசேகரன், கோவை, கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது; இதற்கிடையில், மேயரின் வாகனம் விபத்தை ஏற்படுத்தியது தெரிந்தும், பல்லடம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
உளவுத்துறை போலீசார்
இது பற்றி உளவுத் துறை போலீசார், முதல்வருக்குத் தகவல் அனுப்பியதாக தெரிகிறது. ஏற்கனவே ஓட்டு சதவீதம் குறைந்ததால், கடும் அதிருப்தியிலிருந்த முதல்வர் ஜெயலலிதா இந்த தகவல் தெரிந்ததும், உடனடியாக மாவட்டச் செயலர் பதவியைப் பறித்ததுடன், மேயர் பதவியை ராஜினாமா செய்யவும் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
கார் பறிமுதல்
இந்த விபத்து தொடர்பாக , சம்பவத்தை நேரில் பார்த்த மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து வேலுச்சாமியின் காரை ஓட்டி வந்த கனகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதேபோல வேலுச்சாமியின் காரையும் பல்லடம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆட்டம் கண்ட அதிகாரமையம்
கோவையில், சசிகலா உறவினர், ராவணனுக்குப் பிறகு,மிகப்பெரிய அதிகார மையமாக உருவெடுத்திருந்த செ.ம.வேலுச்சாமியின் ஆதிக்கம், வசூல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல, எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், ஆளும்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழில் அமைப்பினர் என, பல தரப்பினரும் முயன்றும் முடியவில்லை. கார் விபத்து வடிவில் சிக்கல் உருவாகி தூக்கியடிக்கப்பட்டுவிட்டார் வேலுச்சாமி என்கின்றனர் அதிமுகவினர்.