அம்மா சிமென்ட் விற்பனை படுஜோர்: 5 நாளில் 10000 மூட்டைகள் விற்பனை...
சென்னை: அம்மா சிமென்ட் விற்பனை தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது. அதே சமயம் திருச்சியில் திங்கட்கிழமை தொடங்கப்பட்ட அம்மா சிமென்ட் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில், ஐந்து லட்சம் கிலோ (10 ஆயிரம் மூட்டை) அம்மா சிமென்ட் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களில் குறிப்பாக சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்ததால், சாதாரண நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில், சிமென்ட் விற்பனை செய்யத் தமிழக அரசு சார்பில், அம்மா சிமென்ட் விற்பனைத் திட்டம் கடந்த 5ஆம் தேதி அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி, 100 சதுர அடிக்கு 50 மூட்டை வீதம், 1,500 சதுர அடி வரை கட்டுவோருக்கு, 50 கிலோ அடங்கிய மூட்டை 190 ரூபாய் வீதம் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாடு சிமென்ட் கழகம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5ஆம் தேதி இத்திட்டம் அறிமுகமானது.
தமிழகம் முழுவதும் அம்மா சிமென்ட்
இந்நிலையில், இன்று முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா சிமென்ட் விற்பனை விரிவுபடுத்தப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 33 மண்டலங்களிலுள்ள கிடங்குகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் ஒன்றிய அளவிலான கிடங்குகள் என மொத்தம் 470 கிடங்குகளில், வீடு கட்டுவோர் உரிய சான்றிதழ்கள் பெற்று, வரைவோலை எடுத்துச் சென்று அம்மா சிமென்ட் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.