மக்கள் விரோத ஆட்சி இனியும் நீடிக்கக்கூடாது - ஜெ.,சமாதியில் தீபாவின் நள்ளிரவு சபதம்
தீபாவும், மாதவனும் இணைந்து நள்ளிரவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு சபதம் செய்துள்ளனர்.
சென்னை: இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று நள்ளிரவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து சபதம் செய்துள்ளார் தீபா.
பிரிந்து இருந்த தீபாவும் மாதவனும் நேற்று ஒன்றாக இணைந்தனர். அதே உற்சாகத்தோடு தொண்டர்களிடமும் பேசி அவர்களையும் உற்சாகப்படுத்தினர்.
இரவு 12.20 மணியளவில் இருவரும் கூட்டாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர். அங்கு மலர் செண்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.
என் லட்சியம்
அதிமுகவிற்கு வலிமையான தலைவர்கள் இல்லாததால், பாஜக இயக்குவதாக தோற்றம் உருவாகியுள்ளது. அதிமுகவை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.
மக்களுக்காக அரசியல்
பல்வேறு சூழ்ச்சி வளைகள் மத்தியில் நாங்கள் இருவரும் இணைந்துள்ளோம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும்.
நீட் தேர்வு
நீட் விவகாரத்தில் ஒரு மாணவியை இழந்தும் இன்னும் அதில் இருந்து விலக்கு பெற்று தர தமிழக அரசுக்கு திராணி இல்லை. நீட் தேர்வை திணிக்கக்கூடாது என்றும் தீபா கூறினார்.
மக்கள் விரோத ஆட்சி
மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி பெரும்பான்மையை இழந்த ஆட்சியாக உள்ளது. எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும் பட்சத்தில் அது நேர்மையாக நடக்குமா என்பது சந்தேகம்தான்.
மக்கள் ஆதரிப்பார்கள்.
தினகரன் தி.மு.கவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை. மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. எனவே தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் பொது மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்றும் கூறினார் தீபா.