எப்படியெல்லாம் சிக்கல் பாருங்க.. கன்னடம் பற்றிய மத்திய அமைச்சர் பேச்சுக்கு கர்நாடக பாஜகவே கண்டனம்
உடுப்பி: கன்னடம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறப்போக, மத்திய அமைச்சர் ஒருவருக்கு கர்நாடக பாஜகவினரே எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய திறன் மேம்பாட்டு துறை மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் அனந்த்குமார் ஹெக்டே. இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று அவர் கூறியது சமீபத்தில் தேசிய அளவில் சர்ச்சைக்கு காரணமானது.
இந்த நிலையில், கர்நாடகாவின் தென் கனரா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
கன்னடம் தெரியாது
கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறுவதாக நினைத்து, அனந்த்குமார் ஹெக்டே ஒரு கருத்தை தெரிவித்தார். கன்னடம் நன்கு தெரிந்தவர்கள் எண்ணிக்கை கர்நாடகாவில் குறைவாக உள்ளது. ஆங்கிலத்தில் இருந்து இலக்கண சுத்தமான கன்னடத்திற்கு மொழி பெயர்ப்பவர்கள் அபூர்வமாகிவிட்டார்கள்.
பிற மாவட்டங்கள் மோசம்
தென் கனரா, வட கனரா, ஷிமோகா மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் உள்ள கன்னடர்களுக்கு சுத்தமாக கன்னடம் வரமாட்டேன் என்கிறது. பெங்களூரில் உள்ளவர்கள் நிலை இன்னும் மோசம். டெக்னாலஜி வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் இருந்து கன்னடத்திற்கு மொழி மாற்றம் செய்ய முடியவில்லை.
எதிர்ப்பு
கல்வி சான்று ஒன்றை வைத்துக்கொண்டு எந்த பயனும் இல்லை. சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அனந்த்குமார் ஹெக்டே பேசினார். இந்த பேச்சு பிற மாவட்ட கன்னடர்களை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது பாஜகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவே எதிர்ப்பு
இதனால் மத்திய அமைச்சர் பேச்சுக்கு கர்நாடக பாஜகவில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடக பாஜக செய்தித்தொடர்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், மத்திய அமைச்சர் தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். கர்நாடகாவில் மாவட்டவாரியாக கன்னடம் பேசும் ஸ்டைல் மாறுபட்டிருக்கும். எனவே அதை வைத்து கன்னட அறிவை தீர்மானிக்க கூடாது என்று தெரிவித்து அனல் கிளப்பியுள்ளார்.