சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவுக்கும், அன்புமணிக்கும் இடையே தான் போட்டி: ராமதாஸ்
ஓசூர்: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே தான் போட்டி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பாமக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பாகலூர் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
வேட்பாளர்கள்
மக்களுக்கு நன்கு தெரிந்தவர்கள், மக்களோடு மக்களாக பழகுபவர்கள், தொண்டு உள்ளம் படைத்தவர்கள், தியாக மனப்பான்மை கொண்டவர்கள் தான் சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுவார்கள். வேட்பாளர் பட்டியல் இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் வெளியிடப்படும்.
ஓசூர்
தமிழகத்தில் உள்ள பிற தொகுதிகளுக்கு எல்லாம் ஓசூர் தான் முன்மாதிரியாக உள்ளது. காரணம் இங்கு தான் பலதரப்பு மக்கள், பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள், பல கலாச்சாரம் கொண்டவர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.
அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் மாற்றம் ஏற்படவும், ஊழல் அற்ற ஆட்சியை அளிக்கவும் மக்களுக்காக பாடுபடும் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று நினைத்து தான் ஓராண்டுக்கு முன்பே டாக்டர் அன்புமணி ராமதாஸை பாமக முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம்.
பேச்சு
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று மக்கள் அன்புமணி ராமதாஸ் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம், முன்னேற்ற என்ற 2 மந்திரச்சொல்லுடன் அன்புமணி ராமதாஸ் கடந்த ஓராண்டு காலமாக மக்களை சந்தித்து பேசி வருகிறார். தமிழக மக்கள் மத்தியில் அன்புமணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது.
போட்டி
வரும் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவுக்கும், அன்புமணிக்கும் இடையே தான் போட்டி. திமுக ஒரு பட்டுப்போன மரம். அது துளிர்க்காது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கப் போவது உறுதி. தேர்தலுக்கு முன்பு அவர் 3வது முறையாக முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
அதிமுக
கட்சி என்று இருந்தால் அதற்கு கொள்கை இருக்க வேண்டும். ஆனால் அதிமுகவுக்கு கொள்கையே இல்லை. அது எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் இருக்கும் கட்சி.
மத்திய அரசு
மத்திய அரசுக்கு தான் அதிகாரம் அதிகம் உள்ளது. எதுவாக இருந்தாலும் மத்திய அரசிடம் ஓடும் நிலை உள்ளது. பாமக ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் பெற்றுக் கொடுக்கும்.