அரசு மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைக்கு தடை... அன்புமணி ராமதாஸ் பகீர்!
அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டெங்குவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் இன்று பாமக சார்பில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமராஸ் கூறியதாவது: வரும் முன் காப்போம் என்ற ரீதியில் டெங்குவை வரும்முன் தடுப்பதற்காகவே நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும் என்று சொல்கிறோம். டெங்கு பாதித்த பின்னர் ரத்த அணுக்கள் எண்ணிக்கை குறையும் போது பப்பாளி இலை சாறு குடித்தால் 2 நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஏடிஸ் கொசு தான் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் உள்ளிட்டவற்றிற்கு காரணமாக அமைகின்றன. எனவே தான் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். தேங்காய் மட்டை, டயர் உள்ளிட்டவற்றில் தேங்கி நிற்கும் மழை நீரிலேயே ஏடிஸ் கொசுக்கள் வளர்கின்றன.
பாமக விழிப்பணர்வு
டெங்குவை ஒழிக்க தொடர்ந்து பாமக விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறது. ஆனால் அரசு மக்களிடையே அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விட்டது, இதன் காரணமாகவே டெங்குவிற்கு பலர் பலியாகி வருகின்றனர்.
ரகசிய உத்தரவா?
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு வந்தால் பரிசோதனை செய்யக் கூடாது என்று அரசு மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளது. மர்ம காய்ச்சல் என்று வருபவர்களுக்கு மர்ம காய்ச்சல் என்றே சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு வேளை டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட பின்னர் உயிரிந்தால் அரசுக்கு அவப்பெயர் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நெறிமுறைகளுக்கு மாறானது
மருத்துவ நெறிமுறைகளுக்கு மாறாக உள்ளது டெங்கு பரிசோதனை செய்யக் கூடாது என அரசு பிறப்பித்துள்ள உத்தரவு. தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேட்டை அடைந்துவிட்டது, அதிலும் சுகாதாரத்துறை மிகவும் மோசமடைந்து விட்டது.
சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும்
குட்கா விவகாரத்தில் தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருவது, சிபிஐ விசாரணை தேவை என்று தான். காவல்துறை உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் சிபிஐ விசாரித்தால் தான் சரியானதாக இருக்கும். வாக்கி டாக்கி ஊழல் தொடர்பாகவும் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை நிலை தெரிய வரும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.