ஊட்டி சிசேரியன் மரணங்கள் எண்ணிக்கை 5 ஆனது! ரத்தசோகை குறைபாடே காரணம்- அமைச்சர் விஜயபாஸ்கர்!!
உதகை: உதகையில் சிசேரியன் செய்து கொண்ட மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதை அடுத்து மரணமடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இளம்தாய்மார்களின் இந்த மரணத்துக்கு ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
குளிர் பிரதேசமான உதகை என்னும் ஊட்டியில் கடந்த 24 ஆம் தேதி முதல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம் தாய்மார்கள் நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் அம்மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண் ரேவதி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் அம்மருத்துவமனையின் மீதான பொதுமக்களின் ஆத்திரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால், அப்பெண்கள் பலியாகி இருக்கலாம் என உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உதகை அரசு மருத்துவமனையில்அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அப்பகுதி கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதகை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுதான் இளம்தாய்மார்களின் மரணத்துக்கு காரணம். மருத்துவர்களின் சிகிச்சை காரணமே அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அம்மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்படும் என்றும், மேலும் இரண்டு மருத்துவர்கள் கூடுதலாக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.