அரசு கேபிள் டிவி மூலம் அரசுக்கு ரூ.180.91 கோடி வருமானம்- சட்டசபையில் தகவல்
சென்னை: அரசுக்கு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் 2014-15 ம் ஆண்டு 181.91 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் எம்எஸ்ஓ உரிமம் பெற மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியுள்ளார். டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டதும், தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி சேவைகளை இந்நிறுவனம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மானிய கோரிக்கை விவாதம்
தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்த துறையின் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், 2011-ம் ஆண்டில் 4 லட்சத்து 94 ஆயிரம் என்றிருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஆகஸ்டு வரை 70 லட்சத்து 52 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றார்.
அதிகரித்த வருவாய்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இணைப்பு பெற்றுள்ள ஆபரேட்டர்களின் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. 2014-15 ம் ஆண்டு அரசுக்கு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் 181.91 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இணையக் கல்வி
தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் புதிய தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்படும். அந்த வகையில், தமிழ்மொழி தொழில்நுட்பம் சார்ந்த, பல்வேறு மொழி ஆய்வு மென்பொருள்கள்; உலகெங்கும் வாழும் தமிழர்க்கு பயனளிக்கும் வகையில், உலக தரத்திலான மதிப்பீட்டுக் கருவிகள்; முழுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான மேலாண்மைத் தளம் அமைக்கப்படும்.
தமிழ் கற்க ஆப்ஸ்
அரிய தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், ஓவியங்கள் ஆகியவற்றின் மின்னுருவாக்கம்; தமிழ் மொழியியல் தரவகம் (டேட்டா) மற்றும் மின் அகராதி; கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் திறன்பேசியில் (டாப்லட்) ஆகியவற்றில் தமிழ் பாடங்கள், இலக்கணம் மற்றும் அகராதி ஆகியவற்றை கற்பிப்பதற்கான குறுஞ்செயலிகளை (ஆப்ஸ்) உருவாக்கிச் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.