இறப்பு சான்று தர ரூ. 500 லஞ்சம் கேட்ட அரியலூர் வட்டாட்சியர்... 7 ஆண்டுகள் 1,2,3 எண்ண உத்தரவு!
இறப்பு சான்றிதழ் வழங்க ரூ. 500 லஞ்சம் கேட்ட அரியலூர் வட்டாட்சியருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் : அரியலூர் மாவட்ட வட்டாட்சியர் இறப்பு சான்றிதழ் தர லஞ்சம் கேட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு வட்டாட்சியரிடம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு, இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார், அதனை வட்டாட்சியர் பின்னிட்டு வழங்குவார்.
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பிறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பெறும் வசதி இருந்தாலும், ஊராட்சிகளில் இந்த வசதி இல்லை. இதனால் படிப்பறிவில்லாத மக்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழை வழங்கும் நிலை இன்றும் பல மாவட்டங்களில் தொடர்கிறது.
இதே போன்று அரியலூரில் ஒருவர் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவரிடம் வட்டாட்சியர் ரூ. 500 லஞ்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அவர் புகார்அளிக்க, அதன் பேரில் வட்டாட்சியரை கையும் களவுமாக பிடித்ததோடு அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைவிதித்து உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் வாங்கிய புகாரால் அந்த வட்டாட்சியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கையும் பாய்ந்துள்ளது.