அத்திக்கடவு- அவிநாசி திட்ட ஆரம்ப கட்டப் பணிகள் உடனே தொடங்கப்படும்: ஓபிஎஸ்
சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்த திருத்திய கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் ஒப்புதல் தரவில்லை என்று கூறியுள்ள ஓ.பன்னீர் செல்வம், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை உடனே செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றும் அரசாணையை இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என, அவிநாசியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை திருப்பூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைக்கால பட்ஜெட்டில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றும் அரசாணையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அறிவிக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் சற்று நேரத்திலேயே அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆரம்ப கட்டப் பணிகள் உடனே தொடங்கப்படும் என்று கூறினார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த திருத்திய கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் ஒப்புதல் தரவில்லை என்று கூறியுள்ள ஓ.பன்னீர் செல்வம், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை உடனே செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட் நிதி ஒதுக்கீடு
2016-2017-ம் ஆண்டு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.60,610 கோடி உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ரூ.2 கோடியும், புதுமை முயற்சி திட்டங்களுக்கு ரூ.150 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
காவல்துறைக்கு நிதி ஒதுக்கீடு
2016-2017-ம் ஆண்டு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.6,099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். மேலும் நிதி நிர்வாகத் துறைக்கு ரூ.985 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு 135 கோடி
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்தார். நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.12,194 கோடியும், குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு ரூ.1,802 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு ரூ.6,938 கோடி
தமிழக அரசின் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.6,938 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம்
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்துக்கு தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.689 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு ரூ9,350 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 2016-2017-ம் ஆண்டு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,032 கோடி ஒதுக்கீடு செய்வதாக தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
உயர்கல்வி, மற்றும் மாற்றுதிறனாளி
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்விக்கு ரூ.3,821 கோடியும், மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.391.93 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறை
2016-2017-ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.9ஆயிரம் கோடியாக இருக்கும் என ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இலவச திட்டங்கள்
5 ஆண்டுகளில் 28 லட்சம் வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அம்மா திட்டங்களால் விலைவாசி உயர்வில் இருந்து தமிழக மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். 7 லட்சம் பெண்களுக்கு 28 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ231 கோடியில் 60,000 கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன