"அம்மா"வுக்கு சிகிச்சை அளிக்க விடாமல் தடுத்து போராடிய குட்டி யானை.. பரிதாபமாக இறந்த தாய் யானை!
ஈரோடு அருகே விவசாய நிலத்தில் மயங்கி விழுந்த பெண் யானை உயிரிழந்தது. முன்னதாக அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க விடாமல் 6 மாத குட்டி யானை பாசப் போராட்டம் நடத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஈரோடு : அந்தியூர் அருகே விவசாய நிலத்தில் தாய் யானை மயங்கி விழுந்தது. அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினரை விடாமல் குட்டி யானை பாசப்போராட்டம் நடத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. தற்போது அந்த தாய் யானை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருக்கும் சென்னம்பட்டி மலையடிவார கிராமத்தில் யானைகள் வந்து செல்வது வழக்கம். இது போன்று கடந்த 3 நாட்களுக்கு முன்னர் விவசாய நிலப் பகுதிக்கு 6 மாத குட்டியானையுடன் வந்த தாய் யானை எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளது.
இன்று காலை முதல் தாய் யானை ஒரே இடத்தில் விழுந்து கிடந்துள்ளது. அதனால் எழுந்து செல்ல முடியாத நிலையில் குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து பிளிறியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்து பெண் யானையை மீட்க வனத்துறையினர் வந்தனர்.
விரட்டியடித்த குட்டியானை
ஆனால் அவர்களை அருகில் நெருங்க விடாமல் குட்டியானை ஆக்ரோஷத்துடன் தாய் யானையை சுற்றி சுற்றி வந்தது. பெண் யானைக்கு என்னவாயிற்று என்று கால்நடை மருத்துவர்களும் அருகில் சென்று பார்க்க முடியாத அளவிற்கு அருகில் செல்வோரை விரட்யடித்தது குட்டியானை.

2 மணி நேரம் நெருங்கவிடவில்லை
இதனையடுத்து குட்டியானையை கயிறு கட்டி அப்புறப்படுத்திவிட்டு தாய்யானைக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்தனர். குட்டி யானைக்கு கழுத்தில் கயிறு கட்டிய நிலையிலும் 2 மணி நேரம் தாயை சுற்றி வந்து பாசப் போராட்டம் நடத்தியது. இதனையடுத்து மற்றொரு கயிறு மூலம் கால் பகுதியை கட்டி அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மயக்க ஊசி
எனினும் தொடர்ந்து குட்டியானை ஆக்ரோஷமாக இருந்தததோடு தாய் யானையை இரண்டு கால்களால் கட்டியணைத்து படுத்திருந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது. எனினும் தாய் யானை நிலை என்னவென்பது தெரியாததால் குட்டி யானைக்கு மயக்கு ஊசி போட்டு அப்புறப்படுத்திவிட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதி வரை போராட்டம்
குட்டி யானையானது மயக்க ஊசி போட்ட நிலையிலும் தாய் யானையின் பக்கத்தில் போய் நின்று கொண்டது. மயக்கம் முழுவதும் வரும் வரை குட்டியானை தாயை யாரும் நெருங்கிவிடாமல் அனைவரையும் விரட்டியடித்தது.

உயிரிழந்த தாய் யானை
ஒருவழியாக குட்டி யானை கட்டுக்குள் வந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் தாய் யானையை பரிசோதித்து பார்த்தனர். அப்போது தாய் யானை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அந்தப் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications