பணம் பதுக்கல் என தகவல்... ராமநாதபுரம் அதிமுக பிரமுகர் வீட்டிற்கு சீல்... தேர்தல் அதிகாரிகள் அதிரடி
ராமநாதபுரம்: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ராமநாதபுரம் அதிமுக பிரமுகர் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலர் எஸ்.எம். நூர்முகம்மது. இவர், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நூர் முகம்மதுவின் வீட்டைச் சோதனையிட அதிகாரிகள் சென்றனர். ஆனால், அப்போது வீடு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதனால், நூர்முகம்மது தலைமறைவாகி விட்டார் எனக் கருதிய அதிகாரிகள் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
ஆனால், அதற்குள்ளாக தகவல் அறிந்த நூர் முகம்மது, தேர்தல் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தான் தற்போது வெளியூரில் இருப்பதாகவும், தனது வீட்டுக் கதவை உடைக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும், தானே நேரில் வந்து சோதனைக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நேற்றிரவு வரை அங்கேயே காத்திருந்தனர். ஆனால், கூறியபடி நூர் முகம்மது அங்கே வரவில்லை. இதனால், வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசாரை காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மண்டல வருமான வரித்துதுறை இணை ஆணையர் மைக்கேல் ஜெரால்டு, தேர்தல் பார்வையாளர் பிரதாப் நாராயண சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் நூர் முகம்மதுவின் வீட்டை சோதனை செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனையில், பெருமளவில் பணம் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.