கிராமங்களிலும் ஊடுருவிய ப்ளூவேல்... மின்னல் வேக மீட்பு அவசியம்!
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ப்ளுவேல் கேம் விளையாட்டு தற்போது தமிழக கிராமப்புறங்களையும் விட்டு வைக்கவில்லை.
சென்னை: உலகம் முழுவதும் பிரபலமடைந்த ப்ளூவேல் விளையாட்டு தற்போது கிராமங்களிலும் ஊடுருவி மாணவர்களின் உயிரை பறித்து வருகிறது.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்டதுதான் ப்ளூவேல் எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு. இந்த விளையாட்டில் மொத்தம் 50 நிலைகள் உள்ளன.
இதை விளையாடத் தொடங்கியதும் நம் செல்போன், லேப்டாப்பில் உள்ள தகவல்கள் திருடப்படுகிறது. இதைத் தொடர்ந்து விளையாட்டினுள் உள்ளே செல்லும் மாணவர்களை கிட்டதட்ட விளையாட்டுக்கு அடிமையாக்கி கட்டளையை நிறைவேற்றும் அளவுக்கு தள்ளிவிடுகின்றனர்.
உடலை வருத்தும் விளையாட்டு
உடலை கத்தியால் கிழித்து கொள்வது, கூர்மையான பொருள்களை கொண்டு கையில் ப்ளூவேல் வரைவது, நடுநிசியில் சுடுகாட்டுக்கு செல்வது, பேய் படம் பார்ப்பது, தண்டவாளத்தில் தனியாக நடந்துசெல்ல கூறுவது உள்ளிட்ட கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
மிரட்டல்
ஒருவேளை இந்த கட்டளைகளை செய்ய மறுத்து விளையாட்டை பாதியில் முடித்து கொள்வதாக கூறினால் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல்களை வெளியே தெரிவித்து விடுவோம் என்று மிரட்டல்கள் வருகின்றன. இதற்கு பயந்து விளையாடி ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் ப்ளூவேல்...
மதுரை மாவட்டத்தில் விக்னேஷ் என்ற மாணவர் ப்ளூவேல் கேம் விளையாடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் தற்கொலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
கிராமப்புறத்தில்....
இந்நிலையில் கரூர் மாவட்டம் நடையனூரில் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ப்ளுவேல் விளையாடி அதன் கட்டளைக்கு பயந்து போலீஸிடம் தெரிவித்ததால் அவர் மீட்கப்பட்டார். இதேபோல் திருச்சி துறையூரில் நாகலாதபுரத்தில் ப்ளூவேல் விளையாடிய அபிஷேக் என்ற மாணவர் மண்டை உடைத்து கொண்டபோது மீட்கப்பட்டார்.
மற்றொரு மாணவன்
இதேபோல் அக்கரைவட்டம் கிராமத்திலும் மாணவர் அலெக்சாண்டர் தற்கொலைக்கு முயன்றபோது மீட்கப்பட்டார். கிராமப்புறத்தில் விவசாய பின்னணியுடன் இருப்பதால் பெற்றோருக்கு கணின, செல்போன் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனால் தனது மகனோ மகளோ என்ன விளையாடுகிறார்கள். ப்ளூவேல் என்றால் என்ன- இத்தகைய விவரங்களை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
விழிப்புணர்வு அவசியம்
உயிருக்கு உலை வைக்கும் இந்த கேம் விளையாடுவதை தடுக்க பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் நவீன செல்போனை கொடுக்க வேண்டாம். அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.
Recommended Video
எப்படி தடுக்க வேண்டும்?
மேலும் செல்போனில் ப்ளூவேல் டவுன்லோடு செய்திருந்தாலும் அதுகுறித்து விவசாய பெற்றோர், கூலி தொழிலாளிகள் ஆகியோர் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கிராமப்புற மக்களின் நலன் கருதி அரசு அதிகாரியோ, போலீஸ்காரரோ மாணவர்கள், இளைஞர்களின் செல்போன்களை வாரம் ஒரு முறை சோதனை செய்யும் நடைமுறை கொண்டு வரவேண்டும். இதனால் மாணவர்கள் உயிரிழப்பை தடுக்கலாம். பொது இடங்களில் விழிப்புணர்வு விளம்பரங்களை வைத்தல், பள்ளிகளில் குறும்படம் போட்டு காண்பித்தல் உள்ளிட்டவற்றை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமானது.