சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புரளி கிளப்பியவருக்கு வலை வீச்சு
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 8 மணியளவில் சென்னை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் ஒன்று தமிழில் வந்துள்ளது. அதில் போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் நபர்களை 42 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இரவுக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிறுத்தம் உஷார் படுத்தப்பட்டன. மேலும், இந்த 3 இடங்களையும் போலீசார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இந்த 3 முக்கிய இடங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் சிக்கவில்லை. இதனால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எஸ்எம்எஸ் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, யார் இந்த புரளி எஸ்எம்எஸ்சை அனுப்பியது என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.