பெரம்பலூர் காங்கிரஸ் வேட்பாளர் மீது சோடா பாட்டில் வீச்சு!
பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேசகர் மீது சோடா பாட்டில் வீச்சு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேசகர் தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் ராஜசேகர் குளித்தலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் சுங்ககேட் பகுதியில் மத்திய காங்கிரஸ் அரசின் சாதனைகளை கூறி தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது ராஜசேகரை குறிவைத்து யாரும் எதிர்பாராத வகையில் சோடா பாட்டில் ஒன்று பறந்து வந்தது. இதைக் கண்டு லாவகமாக ராஜசகேர் குனிந்து கொண்டார். அப்போது அந்த பாட்டில் வாகனத்தில் விழுந்து உடைந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் சோடா பாட்டில் வீசிய நபரை பிடித்து நையப்புடைத்தனர். உடனே பாதுகாப்புக்கு வந்த போலீசார் அந்த நபரை மீ்ட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்னர்.
இந்த சோடா பாட்டில் வீச்சு குறித்து காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் சிலர் கூறுகையல், காவிரி பகுதியில் ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். அதை ராஜசேகர் கடந்த பல ஆண்டுகளாகவே எதிர்த்து போராடி வருகின்றார். இதன் காரணாகவே, அவர் மீது திட்டமிட்டு சோடா பாட்டில் வீச்சு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவத்தை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் படை சூழ ராஜசேகர் வாக்கு கேட்டு வருகின்றார்.