ஆண்டாள் முன் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - மயிலாப்பூரில் போராட்டம்
கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அம்பாள் கோயிலில் ஆண்டாள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மயிலாப்பூரில் போராட்டம் மேற்கொண்டனர்.
Recommended Video

சென்னை: ஆண்டாளைப் பற்றி தவறாக பேசிய வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி மயிலை மாங்கொல்லையில் ஆயிரக்கணக்கான பிரமாணர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படும் ஆண்டாள் நாச்சியார் குறித்து கவிஞர் வைரமுத்து தவறான கருத்து கூறினார் என்பது குற்றச்சாட்டு. இதனைக் கண்டித்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாப்பூரில் போராட்டம் நடத்தினர்.
கவிஞர் வைரமுத்து சில நாட்களுக்கு முன் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.
அந்த கட்டுரையில் ஆண்டாள் குறித்து சில கருத்துகள் கூறியிருந்தார். அந்த கருத்து இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வைரமுத்துவிற்கு கண்டனம்
ஆண்டாள் பற்றி பேசிய வைரமுத்துவிற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்து பேசினார். கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிராமணர்கள் போராட்டம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிராமண பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால், மாங்கொல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

மாட வீதியில் ஜெகன்நாதர் தேர்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாட வீதியில் நேற்று மாலை பூரி ஜெகன்நாதர் கோவில் தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பிரமாண சமுதாய மக்கள் கைகளில் ஆண்டாள் புகைப்படத்தை ஏந்தியவாறு வைரமுத்துவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

பெண்களும் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மயிலாப்பூர் கிளை தலைவர் ஜி.ராஜேஷ் நாராயணன், மந்தைவெளி கிளை தலைவர் கே.ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் ஜி, நடிகர் எஸ்.வி.சேகர், பாரதியார் மக்கள் கட்சி தலைவர் மயிலை சத்யா உள்பட ஏராளமான பிராமண பெண்களும் கலந்துகொண்டனர்.

பாரதிராஜாவிற்கு கண்டனம்
நடிகர் எஸ்.வி.சேகர் பேசும்போது, ஆண்டாள் கோவில் சன்னதியில் கவிஞர் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து பேசியதை கண்டிக்காமல் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ள இயக்குனர் பாரதிராஜாவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கும் எனது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்றார்.

போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அம்பாள் கோயிலில் ஆண்டாள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்பாட்டம் காரணமாக மயிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications