அக்கா, தம்பி அடுத்தடுத்து மரணம்.. ஆத்தூரை நெகிழ வைத்த சோகம்!
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பேரன், பேத்தி எடுத்த நிலையில் அக்கா- தம்பி இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
ஆத்தூர்: ஆத்தூரில் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்த தம்பியின் உடலை பார்த்து கதறி அழுத அக்காவும் இறந்ததால் சாவில் இணை பிரியாத இவர்களின் பாசத்தை கண்டு உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் நரசிங்கபுரம் 2-ஆவது வார்டு அன்னை கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் கந்தன் (60), பால் வியாபாரியான இவர் தனது மனைவி பழனியம்மாளுடன் வசித்து வந்தார். இவர்களின் 2 மகன்கள் ஏற்கெனவே இறந்து விட்டனர். ஒரே மகளுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
கந்தன் இறந்தார்
கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் கந்தன் அவதிப்பட்டு வந்தார். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை அடுத்து அவரை பார்க்க அக்கா பழனியம்மாள் (66) (கந்தனின் மனைவியின் பெயரும் பழனியம்மாள்) மற்றும் உறவினர்கள் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் வந்தனர்.
மயங்கி விழுந்தார்
அக்காவையும், உறவினர்களையும் கண்ட சிறிதுநேரத்தில் கந்தன் இறந்து போனார். இதையடுத்து அந்த வீடே துக்கத்தில் ஆழ்ந்தது. அக்கா பழனியம்மாள், தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது திடீரென அவரும் மயங்கி விழுந்தார்.
உறவினர்கள் அதிர்ச்சி
சிறிது நேரத்தில் பழனியம்மாளின் உயிரும் பிரிந்தது. தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் இறந்தது அங்கு வந்த உறவினர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த பழனியம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
உடல் அடக்கம்
கந்தனின் உடல் அடக்கம் முடிந்த பிறகு, பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள மகன் வீட்டுக்கு பழனியம்மாளின் உடல் எடுத்து செல்லப்பட்டு அந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. பேரன், பேத்திகள் எடுத்து 60 வயதை கடந்த நிலையிலும், உடன் பிறந்த தம்பி மீது கொண்ட பாசத்தால் அவர் இறந்த சில நிமிடங்களில் அக்கா பழனியம்மாளும் இறந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.