சென்னை: கனமழையில் 11 மாடி கட்டிடம் இடிந்து புதையுண்டது - 11 பேர் பலி- 40 பேர் கதி என்ன?
சென்னை: சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் ஒன்றுக் கட்டப்பட்டு வருகிறது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் திடீர் கனமழை பெய்தது. அதில், அந்த கட்டிடம் அப்படியே இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த இடிபாடுகளில், அங்கு கட்டடப் பணிக்காகத் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டோர் சிக்கியியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 பேர் பலி:
கட்டிடம் முழுவதும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அங்கு மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடந்து வருகிறது.
தேசிய பேரிடர் மீட்புக் குழு:
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் இணைந்துள்ளது. மோப்ப நாய்காளின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இடிவிழுந்ததா?
கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடி தாக்கியே விபத்து நிகழ்ந்ததாக கட்டிடத்தை கட்டிவரும் கட்டுமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. போரூர் ஏரி இருந்த பகுதியில் கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த பகுதியைச் சுற்றிலும் 5 மாடிகளைத் தவிர வேறு எந்த கட்டிடமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதான் முதன்முறையாக 11 மாடி கட்டிடம் ஆகும்.
முதல்வர் வேதனை- உத்தரவு:
இந்த துயர சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேதனை தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் மீட்புப் பணியில் மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள்- கமிஷனர்:
சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். உதவி எண்கள் இடிபாடுகளில் சிக்கியவர்கள் பற்றிய நிலைமை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை எண்: 044- 40012345
4 பேர் கைது:
இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான பணிகளை மேற்கொண்டிருந்த பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து ஆகியோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.