பஸ் கட்டண உயர்வால் ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம் - படியில் ஆபத்தான பயணம்
பஸ்களில் கட்டணம் இரு மடங்காக அதிகரித்துள்ளதால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
சென்னை: பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்யும் பலரும் மின்சார ரயில்களையே நாடியதால் வழக்கமான கூட்டத்தை விட புறநகர் ரயில்களில் அலைமோதியது. கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில், மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
பேருந்து கட்டணத்தை அதிக அளவு உயர்த்தியதால் உயிரை பணயம் வைத்து ரயில்களில் பயணம் செய்வதாக அவர்கள் வேதனையுடன் பயணிகள் தெரிவித்தனர். ஷேர் ஆட்டோக்களிலும் கட்டணம் அதிகரித்து விட்டதாக பயணிகள் தெரிவித்தனர். பல பகுதிகளுக்கு நடந்தே செல்வதாகவும் கூறியுள்ளனர்.
அரியலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் ,சென்னை, சேலம் மற்றும் பெங்களூர் செல்லும் பயணிகள், ரயில் நிலையத்திங்களில் அலைமோத தொடங்கினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில், காலை முதலே டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் போன்றவற்றில் அதிகளவில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால், ஏராளமான பயணிகள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
மதுரையில் இருந்து திருச்சி வரை செல்லும் பாசஞ்சர் ரயில்களிலும், மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயிலிலும், ஈரோடு, திருப்பூர், கோவை செல்லும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
பாண்டிச்சேரியிலும் தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டதால் காரைக்காலில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலம் மற்றும் பெங்களுர் செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. படிகளில் தொங்கியபடி ஆண்களும் பெண்களும் பயணித்தனர்.