ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்
சென்னை: ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கக்கோரி நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப் படுவதாக கேபிள் சங்கங்கள் அறிவித்துள்ளது.
18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.
இதனால், உடனடியாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே கொண்டு வர அதிமுக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விடுமுறைக்கால சிறப்பு நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஜெயலலிதா சிறையில் உள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டங்களில் பிற துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாளை கேபிள் சங்கங்கள் போராட்டத்தில் இறங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கேபிள் டிவி இணைப்பு கட் செய்யப்படுமாம்.