காவிரி பிரச்சினை: சென்னையில் ஐஓசி அலுவலகம் மீது கல் வீச்சு
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் மவுனம் சாதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ன்னையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பிராந்திய அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், கர்நாடகா தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மட்டுமின்றி, மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் 8 பேர் கொண்ட மர்மகும்பல் இங்கு சென்றனர். திடீரென அவர்கள், மத்திய அரசு மற்றும் மோடியை கண்டித்து முழக்கமிட்டனர்.
பின்னர், கற்கள் மற்றும் உருட்டுக்கட்டை ஆகியவ்றறை சரமாரியாக வீசினர். இதில், அந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள், மர்மகும்பல் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து போலீசார், அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மர்ம கும்பலின் உருவம் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.