தஞ்சை சோழகன்குடிகாட்டில் காவிரி வல்லுநர் குழு ஆய்வு.. விளக்கம் அளித்தார் அமைச்சர்
தஞ்சாவூர்: காவிரி நதி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள படி மத்திய தொழில் நுட்பக் குழு இன்று தஞ்சாவூர் அருகே உள்ள சோழகன்குடிகாட்டில் ஆய்வு மேற்கொண்டது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இரு மாநிலங்களிலும் காவிரி படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் தண்ணீர் தேவை ஆகியவை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் தேசிய நீர்வள ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்று உள்ளனர்.
இந்த நிபுணர் குழுவினர் கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் கர்நாடகத்தில் காவிரி பாசன பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து அணைகளை பார்வையிட்டனர். அங்கு ஆய்வுப் பணியை முடித்துக் கொண்ட நிபுணர் குழு தமிழகத்தில் ஆய்வு செய்ய வந்துள்ளது.
நிபுணர் குழு நேற்று மேட்டூர் அணைக்குச் சென்று ஆய்வு செய்தது. அவர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம், பயன்படுத்த முடியாத நீரின் அளவு குறித்த விவரங்களை மத்திய குழுவினரிடம் விளக்கி கூறினார்கள். அந்த சமயத்தில் அங்கு வந்த விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவை நிபுணர் குழுவினரிடம் அளித்தனர்.
பின்னர், நிபுணர் குழுவினர் பிற்பகல் 3 மணியளவில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை பார்வையிட்டனர். அங்குள்ள நீர் வரத்து கணக்கிடும் அறைக்கு சென்ற அதிகாரிகள் தினசரி நீர்வரத்து பட்டியலை பார்வையிட்டு சரிபார்த்தனர். மேலும் தற்போதைய நீர்வரத்து நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். பாசனப்பகுதியின் தண்ணீர் தேவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர்.
இந்நிலையில், இன்று தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சென்று காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன்படி, தஞ்சாவூர் அருகே உள்ள சோழகன்குடிகாட்டில் இன்று வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. மேலும், பயிர்கள் பாதிப்பு குறித்து தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு குழுவுக்கு விளக்கம் அளித்தார். பின்னர், விவசாயிகள் வல்லுநர் குழுவிடம் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
அடுத்ததாக, சோழகன்குடிகாட்டில் ஆய்வை முடித்துக் கொண்ட மத்திய குழு அடுத்து மதுக்கூர் சொக்கநாதபுரம் புறப்பட்டுச் சென்றது.