கோகுல்ராஜ் கொலை: யுவராஜிடம் கேட்க 1800 கேள்விகள் தயார் செய்துள்ள சிபிசிஐடி
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்ததில், யார், யாருக்கு தொடர்பு உள்ளது என யுவராஜிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில் என்னென்ன ஆவணங்களை வைத்துள்ளார் என்பது பற்றியும் விசாரித்துள்ள போலீசார், 1800 கேள்விகள் வரை தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் கடந்த 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி போலீசில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து 7 மணிநேரம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அன்றிரவே சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் திங்கட்கிழமையன்று யுவராஜை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
விடிய விடிய விசாரணை
இதையடுத்து நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து யுவராஜிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். செவ்வாய்கிழமையன்று இரவும் விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
1800 கேள்விகள்
யுவராஜிடம் கேட்பதற்காக, சுமார் 1800 கேள்விகளை சிபிசிஐடி போலீசார் தயார் செய்து வைத்துள்ளனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக நேற்று யுவராஜிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் யுவராஜ் மவுனம் சாதித்தார். இந்த வழக்கில் யுவராஜ் நூறு நாள்களுக்கும் மேல் தலைமறைவாக இருந்த பின்பே சரண் அடைந்துள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை
இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தார்? அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? என்பது குறித்தும் அவரிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், யுவராஜ் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு பிரியா தற்கொலை
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில், அவருக்கு அதிகாரிகள் டார்ச்சர் அளித்தது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக, தலைமறைவாக இருந்தபோது வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஆடியோவில் யுவராஜ் கூறியிருந்தார். அவர் என்னென்ன ஆவணங்களை வைத்துள்ளார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில்
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட இடம், அவரது உடல் கிடந்த பள்ளிபாளையம் ரயில்வே தண்டவாளம், திருச்செங்கோடு மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு யுவராஜை அழைத்து சென்று விசாரணை நடத்தவும், சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சரணடைந்த அருண்
இந்நிலையில், இதே வழக்கில் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை பேரவை நிர்வாகி சங்ககிரி அருண்,21 கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல், நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். பின்னர், நீதிபதி உத்தரவின்பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.