ராமஜெயம் கொலைவழக்கு…. நெருங்கும் கெடு...6 நாளில் கொலையாளியை பிடிக்குமா சிபிசிஐடி போலீஸ்?
மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராம ஜெயம் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள கெடு முடிய 6 நாட்களே உள்ளது. அதற்குள் குற்றவாளி யாரென்று கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதால் வரும் 24ம் தேதிக்குள் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என்று சிபிசிஐடி போலீஸார் உறுதியாகக் கூறி வருகின்றனர்.
திருச்சியில் 'அண்ணன்' கே.என்.நேரு அதிகாரப்பூர்வ அமைச்சராக வலம் வந்தார் என்றால் கட்சியிலோ, ஆட்சியிலோ அதிகாரத்தில் இல்லா விட்டாலும் சக்திவாய்ந்த அதிகாரமையமாக வலம் வந்தவர் 'அவரது தம்பி கே.என்.ராமஜெயம். எம்.டி என்றால் எல்லோருக்கும் தெரியும். இறந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் அவர் எம்.டிதான். திருச்சி தி.மு.க.வில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தி.மு.க. மாவட்டச் செயலாளராக விளங்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் அரசியல் நிகழ்வுகளுக்கு முதுகெலும்பாக, இருந்தவர் ராமஜெயம் என்றால் மிகையாகாது.
2012 மார்ச் 29ம் தேதி ராமஜெயத்தை அடையாளம் தெரியாத கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்து, திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் முட்புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது. இந்தப் படுகொலை அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பதைபதைப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை திருச்சி மாநகர காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து விசாரித்தனர். நேரு குடும்பத்தார், ராம ஜெயத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள், நூற்றுக்கணக்கான ரவுடிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
சிபிசிபிஐடிக்கு மாற்றம்
கிணற்றில் போட்ட கல்லாக மாறியது வழக்கு. இதையடுத்து கடந்த 2012 ஜூன் மாதத்தில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் 12 தனிப்படைகளை அமைத்து விசாரித்தனர். அவர் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.
கொலைக்கான காரணம்
ராமஜெயம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்ததால், தொழில் போட்டி காரணமாகவும் இந்தக் கொலை நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. எனினும், கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிரமம் உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.
சிபிஐக்கு மாற்றக்கோரி
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூலை 24ம் தேதிக்குள் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென கெடுவிதித்து கடந்த ஜூன் 12ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
விசாரணை விறுவிறுப்பு
இதையடுத்து, வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். உயர்நீதிமன்ற அளித்த கெடு முடிய இன்னும் 6 தினங்களே உள்ளன. ராமஜெயம் கொல்லப்பட்ட தினத்தில் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு குற்றவாளி அப்பு திருச்சியில் இருந்தார் என்ற தகவல் பரவியது.
குற்றவாளியை கண்டுபிடிப்போம்
இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. உயர் நீதிமன்றத்தில் ஜூலை 24ம் தேதி வழக்கு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். நீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்கு முன்பாகவே குற்றவாளிகளைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம். மற்றபடி, விசாரணை விவரங்களைத் தெரிவிக்க முடியாது என்று கூறிவருகின்றனர்.
புதிருக்கு விடை கிடைக்குமா?
எத்தனை முறை திரும்ப திரும்ப விசாரித்தும் ராமஜெயம் கொலைக்கான காரணத்தை உறுதி செய்ய முடியவில்லை. ராமஜெயத்துக்கு அரசியலில் போட்டி இல்லை. தொழில்முறை கூட்டாளிகளுடன், அவருக்கு தகராறு எதுவும் இல்லை. அதனால், கட்ட பஞ்சாயத்து மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னை குறித்து விசாரித்து வருகிறோம் என்று சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.
சிபிசிஐடி நம்பிக்கை
ராமஜெயம் உடலை சுற்றி இருந்த போர்வையின் டிசைனை வைத்து நடத்திய விசாரணையிலும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இருப்பினும் வரும், 24ம் தேதிக்குள், குற்றவாளிகளை கைது செய்யமுடியும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர் சிபிசிஐடி போலீசார். ராமஜெயம் கொலைக்கான புதிரை சிபிசிஐடி போலீசார் எப்படி விடுவிக்கப் போகிறார்களோ?