டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு - ஹைகோர்ட்டில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்
சென்னை: திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, சிபிசிஐடி தனது விசாரணை நிலவர அறிக்கையை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் தற்கொலை வழக்கை விசாரணை செய்து வந்த திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழவே, இந்த தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார், அதில், எனது மகள் விஷ்ணு பிரியா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போலீஸ் டி.எஸ்.பி.யாக வேலை பார்த்து வந்தார். உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக, அவர் விநாயகர் சதுர்த்திக்கு வீட்டுக்கு வருவதற்கு முன்பாக, என்னிடம் தெரிவித்தார். பின்னர் ஆகஸ்ட் 18ம் தேதி என் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
என் மகள் தற்கொலை வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் வகையிலும், வேகத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும் காவல்துறையினர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். தங்களது துறையைச் சார்ந்த அதிகாரிகளை காப்பாற்றும் நோக்குடன் சிபிசிஐடி போலீசார் ஒருதலைபட்சமாக, சார்புத் தன்மையுடன் விசாரணை செய்து வருகின்றனர். எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி.யின் தலையீடு இருப்பதால் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறதா அல்லது வெறும் கண்துடைப்பா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. போலீசார் சாட்சிகளை மிரட்டுகின்றனர். எனவே, எனது மகள் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் இந்த வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த சிபிசிஐடி விசாரணையை இந்த கோர்ட் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் பப்ளிக்பிராசிகியூட்டர் சண்முகவேலாயுதம் ஆஜராகி, இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார்.
இதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அறிக்கை தாக்கல் செய்தால் அதன் நகல் தர வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணயை 20ம் தேதிக்கு தள்ளிவைத்து அன்றைக்கு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி இன்று உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தனது விசாரணை நிலவர அறிக்கையை, தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.