தமிழகத்தில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிச.18 வரை வசூல் ரத்து: மத்திய அரசு !
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தமிழகத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்க வசூல் ரத்தை வருகிற 18 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
கடந்த ஒருமாதமாக பெய்த வரலாறு காணாத கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வருவதால் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று டிசம்பர் 11-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்னும் சென்னை பழைய நிலைக்கு திரும்பாததாலும் பல இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாலும் வருகிற 18 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது
வாகனங்களுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நிவாரண பொருள்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.